ஆளுநர் ரவிக்கு என் மீது ரொம்ப பாசம்! சிரித்து கொண்டே பொன்முடி நறுக்! காரணத்தையும் சொல்கிறார் கேளுங்க
விழுப்புரம்: லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியைச் சர்வாதிகாரி என்று விமர்சித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, தன் மீது ஆளுநர் ரவிக்குப் பாசம் அதிகம் என்றும் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக தனது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. விழுப்புரத்தில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் ரவிக்குமாருக்கு ஆதரவாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பிரச்சாரம் செய்தார்.

பொன்முடி தாக்கு: அப்போது பேசிய அவர், "சர்வாதிகாரியாக மாறவே மோடி நினைக்கிறார். இதன் காரணமாகவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்று அவர் சொல்கிறார். அதெல்லாம் நடக்குமா.. ஊராட்சி மன்றம், சட்டசபை, நாடாளுமன்றம் என அனைத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த முடியுமா..
ஊராட்சி மன்ற தேர்தலில் கவுன்சிலர்கள் தனியாகத் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் மக்கள் பணி செய்வார்கள். ஆனால், அதை விட்டுவிட்டு அனைத்திற்கும் ஒரே தேர்தல் என்றால் என்ன.. மக்களைக் குழப்புவதற்காகவே மத்திய அரசு இதையெல்லாம் சொல்லி வருகிறது. அவர்களுக்குத் தக்க பாடத்தைப் புகட்ட வேண்டும்.
தமிழர்களுக்குத் துரோகம்: குடியுரிமை சட்டம் என்று ஒன்றைக் கொண்டு வந்தார்கள். அந்த சட்டத்தையாவது முறையாக வடிவமைத்தார்களா என்றால் இல்லை தான். ஈழத்தில் இருந்து இங்கே வந்த தமிழர்களுக்குக் குடியுரிமை தர வேண்டுமா இல்லையா.. இங்கே வந்தால் தமிழன் என்று பேசும் பிரதமர் மோடிக்கு அந்த தமிழர்கள் மீது கொஞ்சமாவது அக்கறை இருந்து இருந்தால் ஈழத்தில் இருந்து வந்த தமிழர்களுக்கும் குடியுரிமை என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படிச் சொல்லவில்லை.
அவர் தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் தமிழ் மீது பாசம் இருப்பது போல சும்மா நடிக்கிறார். கர்நாடகாவில் தமிழர்கள் தான் தாக்கினார்கள் என்ற போது முதல்வர் தொடங்கி பலரும் கண்டனம் தெரிவித்து புகார் அளித்தனர். ஆனால், பிரதமர் மோடி ஏன் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கவில்லை. அவருக்குத் தமிழ் மீதும் அக்கறை இல்லை தமிழர் மீதும் அக்கறை இல்லை. மதவெறியைத் தூண்டிவிட்டு பாசிச ஆட்சியை நடத்த வேண்டும் என்பதே மோடியின் நோக்கம். அதை நாம் நிறுத்தியாக வேண்டும்.
ஆளுநருக்குப் பாசம் அதிகம்: ஆளுநருக்கு என் மீது பாசம் அதிகம்.. சமத்துவம், சமதர்மம், பகுத்தறிவு கொள்கையைப் பேசும் ஆள் நான்.. மற்ற அமைச்சர்களைக் காட்டிலும் அவருடன் நேரடியாகவும் தொடர்பில் இருக்க வேண்டிய ஆள் நான். இதனால் என் மீது அவருக்குப் பாசமும் பிரியமும் அதிகம்.
முதல்வர் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து என்னை உடனடியாக அமைச்சராகப் பதவி பிரமாணம் செய்து வைக்கிறேன் என்பதே சரி. அரசியலமைப்பு சட்டம் அதைத் தான் சொல்கிறது. நிர்வாகத்தை நடத்துபவர் முதல்வர் தான். ஆளுநர் இல்லை. ஏனென்றால் ஆளுநரை மக்கள் தேர்வு செய்யவில்லை. அவர் சட்டசபை அல்லது லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வந்தவரா.. அவர் வெறும் நியமனத்தின் மூலம் வந்த நபர்.
மாநில அரசு சொல்லும் விஷயத்தைச் செய்ய வேண்டியது தான் அவர் பொறுப்பு. அரசியலமைப்பு சட்டம் அதைத்தான் சொல்கிறது. தமிழக முதல்வர் நிறைவேற்றும் சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. கேரளாவிலும் இதேபோல ஏழு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆளுநரை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சி தலைவர்கள் ஆளும் மாநிலங்களை ஆட்டி பார்க்கலாம் என்று நினைக்கும் இந்த பாஜக அரசைத் தூக்கி எறிய வேண்டும்" என்று அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications