எத்தனை வழக்கு போட்டாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது.. "பவர்” கையில்.. சவால் விடும் எடப்பாடி!
விழுப்புரம் : எத்தனை பொய் வழக்கு போட்டாலும், அதனை சந்திக்க தயாராக உள்ளதாகவும், மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் தூரம் வெகு தொலைவில் இல்லை எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக சொந்த மாவட்டமான சேலத்திற்குச் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி. வழிநெடுக அவருக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்துள்ளனர்.
விழுப்புரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, வழக்குகளை தொடர்ந்து அதிமுகவை அச்சுறுத்த நினைத்தால், அவை கானல் நீராக போகும் எனக் கூறினார்.

முதல் முறையாக
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருவதால் கடந்த சில நாட்களாக சொந்த ஊரான சேலத்திற்குச் செல்லாமல் இருந்து வந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், சட்டசபை 3 நாட்கள் விடுமுறையைத் தொடர்ந்து, இன்று சென்னை கிரீன் வேஸ் சாலை இல்லத்தில் இருந்து சாலை மார்க்கமாக சேலத்திற்குப் புறப்பட்டார். அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தனது சொந்த மாவட்டமான சேலத்திற்குச் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து, அவர் செல்லும் வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உற்சாக எடப்பாடி
கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இருந்து உற்சாக ஆரவாரத்தோடு, பட்டாசு வெடிச் சத்தங்களோடு காரில் கிளம்பிய எடப்பாடி பழனிசாமிக்கு தாம்பரம் சானடோரியம் பகுதியில் அதிமுகவினர் ஏராளமானோர் திரண்டு மாலை அணிவித்து வரவேற்றனர். தொடர்ந்து மதுராந்தகத்தில் அதிமுக நிர்வாகிகள் பூங்கொத்து, கொடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்றனர். அங்கிருந்து விழுப்புரம் சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சோதனைகளை கடந்து
அப்போது பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அதிமுக எனும் இயக்கத்தை உருவாக்கிய போது எம்ஜிஆரும், அதன் பிறகு ஜெயலலிதாவும் பல்வேறு சோதனைகளை சந்தித்தனர். அதேபோல் நாமும் பல்வேறு சோதனைகளைச் சந்தித்து வெற்றியை கண்டுள்ளோம். அதிமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்வோம். அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. தொண்டர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் செயல்படுவேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்கி நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்." என்றார்.

பி டீம்
மேலும் பேசிய அவர், "இந்தியாவில் எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும், மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தற்போது நம்மைடையே இல்லாவிட்டாலும், நாம் தான் அவரது வாரிசுகள். நம்மோடு இருந்து எதிரியாக செயல்பட்டு தற்போது பி டீமாக செயல்பட்டு வருகின்றனர். தி.மு.க ஆட்சியில் அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடப்பட்டு வருகிறது. அவைகளை எல்லாம் சட்ட ரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதனை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளளோம்.

தொட்டுப் பார்க்க முடியாது
அதிமுகவை எவராலும் சீண்டி பார்க்கவும் முடியாது, தொட்டுப்பார்க்கவும் முடியாது. வழக்குகளைப் போட்டு அச்சுறுத்த நினைத்தால், அவை கானல் நீராகப் போகும். அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை. வருகிற நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் வரலாம். அதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல். அதிமுகவிற்கு விடிவு காலம் பிறக்கும். ஒளிமயமான எதிர்காலம் நம் கண்ணுக்கு முன்னால் தெரிகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவோம்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications