கடவுள் செய்யாததை கருணாநிதியும் ஸ்டாலினும் செய்துள்ளனர்.. அமைச்சர் பொன்முடி பரபர பேச்சு!
விழுப்புரம் : அன்று கடவுள் செய்யாததை கருணாநிதி செய்திருக்கிறார். அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி இருக்கிறார் என அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.
Recommended Video
முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திமுக சார்பில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தப் பயிற்சிப் பாசறை கூட்டங்களில், திராவிடம் பற்றியும், முதல்வர் சொல்லும் திராவிட மாடல் ஆட்சி பற்றியும் சிறப்பு அழைப்பாளர்கள் பேசி வருகின்றனர்.

பயிற்சி பாசறை
விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு திமுக துணை பொதுச் செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி, மாவட்ட செயலாளர் புகழேந்தி ஆகியோர் தலைமையேற்றனர். வழக்கறிஞர் அருள்மொழி, திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் காந்தி காந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கல்விக்கொள்கை
இந்தப் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் க.பொன்முடி, "புதிய கல்விக்கொள்கை என்பது குலக்கல்வியை மீண்டும் புகுத்தும் முயற்சி. இந்தி, சமஸ்கிருதம் படித்தால் மத்திய அரசு கூடுதல் உதவித்தொகை தருகிறது. கருணாநிதி காலத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இன்றும் அரசு வேலைக்குச் செல்பவர்கள் தமிழில் தேர்வு எழுதும் முறை உள்ளது. தமிழுக்காக திமுக அரசு செய்தது அதிகம்." என்றார்.

ஆரியம்
மேலும், "ஏற்றத்தாழ்வு உள்ள சமுதாயத்தை எதிர்க்க வேண்டும் என முதலில் கூறியவர் புத்தர். அதனால் தான் அம்பேத்கர் புத்த மதத்திற்கு செல்ல வேண்டும் எனக் கூறினார். பெளத்த மதம் பிறந்த இடம் இந்தியாவாக இருந்தாலும் புகுந்த இடத்திற்கு சென்றதால் இம்மதம் வளர்ச்சி பெற்றது. எப்போதுமே பிறந்த இடத்தை விட புகுந்த இடத்தில் நிரந்தர வளர்ச்சி இருக்கும். திராவிடத்தை அழிக்க வேண்டுமென இன்றளவும் ஆரியம் முயற்சி செய்கிறது.

திராவிடம்
கடவுளை தரிசிப்பதில் தவறில்லை. எல்லோரும் சமம் என்று கூறுவது தான் திராவிடம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார் கருணாநிதி. எல்லோரும் சமம் எல்லோரும் ஒன்று என்ற உணர்வினை உருவாக்கியது தான் திராவிடம்" எனப் பேசினார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

புராணங்கள்
மேலும் பேசிய அவர், "சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தனார், சாமியை தரிசனம் செய்ய சென்ற போது தாழ்த்தப்பட்டவர் என்பதால் தரிசனம் செய்ய அனுமதிக்காமல் வெளியில் இருந்து சாமியை தரிசனம் செய்ய கூறியபோது நந்தி தடங்கலாக இருந்ததால் நந்தியே சற்று விலகி இரும் என நடராஜர் தெரிவித்ததால் நந்தி சற்று சிதம்பரம் கோவிலில் விலகி இருக்கும் என புராணங்கள் கூறுகின்றன.

கடவுள் செய்யாததை
நந்தியே சற்று விலகி இரும் எனக் கூறிய நடராஜர், நந்தனாரே உள்ளே வா என கூறி இருந்தால் இந்த பிரச்சனையே இருந்திருக்காது. அன்று கடவுள் செய்யாததை இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என கலைஞர் செய்திருக்கிறார். அதைத்தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என நடைமுறைப்படுத்தி இருக்கிறார்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications