விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமக வேட்பாளருக்கு உடல் நலக்குறைவு.. சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் நாளை சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாமக வேட்பாளர் சி. அன்புமணிக்கு லேசான உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இது தொடர்பாக சி அன்புமணி கூறுகையில், "வழக்கமான பரிசோதனைகள் முடிந்து நலமுடன் வீடு திரும்பியதாகவும் இடைத்தேர்தலில் நாளை காலை 8 மணிக்கு வாக்களிக்க உள்ளதாகவும்" தெரிவித்தார்.
விக்கிரவாண்டி தொகுதி பாமக வேட்பாளருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பாமக வேட்பாளர் சி அன்புமணி கட்சியினருடன் ஆலோசனை செய்து கொண்டிருந்த போது, அவருக்கு லேசான படபடப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சி. அன்புமணி அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்கிரவாண்டியில் நாளை தேர்தல்: தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்றும் ஜூலை 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6 ம்தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து காலியாக இருந்த இந்த தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. இதன்படி, நாளை (ஜூலை 10) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்தது. திமுக, பாமக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இடைத்தேர்தல் போட்டியில் 29 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.
வேட்பாளர்கள் யார் யார்?: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து முதல்வர் மு க ஸ்டாலின் எக்ஸ் வலைத்தளத்தில் வீடியோ பதிவு வெளியிட்டு பிரசாரம் செய்தார். மேலும் அமைச்சர்கள், எம் எல் ஏ க்கள் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பாமக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டன. தேர்தல் விதிமுறைப்படி வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில் 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும். அதன்படி நேற்று மாலை 6 மணியுடன் தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது. வாக்குப்பதிவு நாளை (புதன்கிழமை) காலை வாக்குப்பதிவு தொடங்குகிறது.
வாக்குச்சாவடிகள்: இதற்காக வாக்குச்சாவடிகள் மும்முரமாக தயார்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 276 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலில் 552 வோட்டிங்க் மெஷின்களும் பயன்படுத்தப்பட உள்ளன. தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் என 1,355 பேர் ஈடுபட இருக்கிறார்கள்.
வீடு திரும்பினார்: பதற்றம் நிறைந்த, 44 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடாவை முற்றிலும் தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற 2 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.
இதனிடையே தான், விக்கிரவாண்டி தொகுதி பாமக வேட்பாளருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சி.அன்புமணி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தற்போது அவர் வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சி அன்புமணி கூறுகையில், "வழக்கமான பரிசோதனைகள் முடிந்து நலமுடன் வீடு திரும்பியதாகவும் இடைத்தேர்தலில் நாளை காலை 8 மணிக்கு வாக்களிக்க உள்ளதாகவும்" தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications