அதிர்ச்சி.. விருதுநகரில் குளிர்பானம் குடித்து பஸ்சில் மயங்கிய சென்னை சிறுவன்.. திண்டிவனத்தில் பலி
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அழகாபுரியில் குளிர்பானம் குடித்துவிட்டு பஸ்சில் குடும்பத்துடன் சென்னை புறப்பட்டு சென்றபோது 14 வயது சிறுவன் திண்டிவனத்தில் பலியானார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூரில் வசித்து வருபவர் ஜெபஸ்டீன். இவரது மனைவி பொருட்செல்வி. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருந்தனர். மகன் பெயர் ஆண்டோனி ஜான் ரோசன். இவருக்கு 14 வயது. மகள் பெயர் ஏஞ்சலின் செல்வ அனுசியா.
இவர்கள் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த திருவிழாவுக்கு வந்திருந்தனர். திருவிழா முடிந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நேற்று இரவு பஸ்சில் சென்னை புறப்பட்டு சென்றனர். பஸ் விருதுநகர் மாவட்டம் அழகாபுரி அருகே நின்றது.

குளிர்பானம் குடித்த சிறுவன்
இதையடுத்து பஸ்சில் இருந்தவர்கள் இறங்கி அருகே உள்ள கடையில் டீ, குளிர்பானம் குடித்தனர். அப்போது அந்தோனி ஜான் ரோசனுக்கு அவரது தாய் பொருட்செல்வி அரை லிட்டர் குளிர்பானம் வாங்கி கொடுத்தார். இதை குடித்த அடுத்த சில நிமிடங்களில் அந்தோனி ஜான் ரோசனுக்கு வாந்தி ஏற்பட்டது.

வாந்தியுடன் மயங்கிய சிறுவன்
இதையடுத்து பஸ்சில் அவர்கள் ஏறி பயணித்தனர். பஸ்சில் வாந்தி எடுத்த அந்தோனி ஜான் ரோசன் மயங்கிய நிலையில் இருந்தார். இதற்கிடையே பஸ் திண்டிவனம் அருகே சென்றது. அங்கு டீ கடையில் பஸ் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பயணிகள் மீண்டும் இறங்கி அங்கு சென்றனர். அப்போது சிறுவனை அவரது குடும்பத்தினர் எழுப்பினர். ஆனால் அவர் மயக்க நிலையிலேயே இருந்தார். கண் விழிக்காததால் குடும்பத்தினர் கண் கலங்கினர்.

திண்டிவனத்தில் பலி
இதையடுத்து சக பயணிகள் முதலுதவி அளித்தனர். இதையடுத்து சிறுவன் அங்கிருந்து திண்டிவனம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுவனை டாக்டர் பரிசோதித்தனர். வரும் வழியிலேயே சிறுவன் இறந்ததாக டாக்டர் கூறினர். இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை மாணவர் இறப்புக்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடரும் சோகம்
சமீபகாலமாக ‛பாஸ்ட்புட்' உணவுகள் சாப்பிட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. கேரளாவில் மே மாதம் துவக்கத்தில் ஷவர்மா சாப்பிட்டு மாணவி இறந்த நிலையில் ஜூன் மாதத்தில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் திருமுருகன் என்பவர் சிக்கன் தந்தூரி சாப்பிட்டு இறந்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது குளிர்பானம் குடித்து 14 வயது சிறுவன் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications