நாங்க தான் இனிமே எல்லாம்! ராஜேந்திர பாலாஜியை கடுப்பாக்கிய ஓபிஎஸ் டீம்! விறுவிறு விருதுநகர் அதிமுக!
விருதுநகர் : அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் மோதல் உச்சத்தில் இருக்கிறது. ஓபிஎஸ் தரப்பில் மாவட்ட செயலாளர்கள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மாவட்ட செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பினருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
'தளபதி' படத்தில் வரும் மம்முட்டி, ரஜினிகாந்த் போல கட்சியிலும் ஆட்சியிலும் இணைபிரியாத நண்பர்கள் போல் இருந்த ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தற்போது 'அக்னி நட்சத்திரம் படத்தில் வரும் கார்த்திக், பிரபு போல ஆகிவிட்டார்கள்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு.. காங்கிரஸ் கார்கேவுக்கு கிடுக்கிப்பிடி.. 7 மணிநேரம் விசாரித்த அமலாக்கத்துறை
அதிமுகவில் மோதல்
எல்லாவற்றிற்கும் கட்சியின் ஒற்றை தலைமை யார்? என்ற பிரச்சினையே மூல காரணம். கட்சிக்கு ஓபிஎஸ் ஆட்சிக்கு எடப்பாடி என நன்றாக சென்று கொண்டிருந்த அரசியல் பயணம், சட்டமன்றத் தேர்தலின் போது தான் பிளவு பட்டது. முதல்வர் வேட்பாளர் , எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளை விட்டுக் கொடுத்த ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லாமல் ஆவேசமாக கிளம்பினார்.
தொண்டர்கள்தான் பாவம்
அதன் பின்னர் நடைபெற்ற அரசியல் நகர்வுகள் பிறகு தற்போது எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தரப்பு கூறுகிறது. அதே நேரத்தில் தானே ஒருங்கிணைப்பாளர் பொருளாளர் பதவிகளில் தொடர்வதாக ஓ.பன்னீர்செல்வம் மல்லுக்கு நிற்கிறார். மாறி மாறி அறிக்கைகள் மூலம் ஆதரவாளர்கள் நீக்கம், புதிய நிர்வாகிகள் நியமனம் என இருவருமே அறிக்கை போர் நடத்தி வரும் நிலையில் உண்மையில் அதிமுகவின் தொண்டர்கள்தான் பாவம் என்ற நிலை உள்ளது.
மோதல் போக்கு
தலைமைக் கழக நிர்வாகிகள் நியமனம், மாவட்டச் செயலாளர்கள் அறிவிப்பு என ஓபிஎஸ் அடுத்தடுத்து அறிக்கை வெளியிட்ட நிலையில் அவருக்கு இணையாக ஆதரவாளர்களை நீக்கி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இதன் காரணமாக ஏற்கனவே இருக்கும் நிர்வாகிகளுக்கும் தற்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பால் நியமிக்கப்பட்டிருக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. நேரடியாக இல்லாவிட்டாலும் சமூக வலைதளங்கள், போஸ்டர்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது.
விறுவிறு விருதுநகர்
மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ,விருதுநகர் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த மோதல் போக்கு சற்று அதிகமாகவே இருக்கிறது என்கின்றனர் விவரம் அறிந்த அதிமுகவினர். குறிப்பாக சர்ச்சைக்கு பெயர் போன முன்னாள் அமைச்சரும், அதிமுக ஆட்சி காலத்தில் ஆவின் நிறுவனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகாருக்கு உள்ளாகி தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியின் சொந்த மாவட்டமான விருதுநகரில் உட்கட்சி மோதல் உச்சத்தில் இருக்கிறது. அதிமுக ஆட்சிக்காலத்தின் போது கட்சியினரை ஒருமையில் பேசி சர்ச்சைக்கு உள்ளாக்கிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தற்போதும் அதனையே கடைப்பிடித்து வருவதாக கூறப்படுகிறது.
ராஜேந்திர பாலாஜி
நீதிமன்றம் ஜாமீன் உள்ளிட்ட விவகாரங்கள் காரணமாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத அவர் விருதுநகரில் சற்று தீவிரமாகவே பணியாற்றி வருகிறார். அதே நேரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் யார் யார் என்பது குறித்த பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு இதுவரை ராஜேந்திர பாலாஜி அனுப்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திர பாலாஜி கிழக்கு மாவட்ட செயலாளரான ஆர் ரவிச்சந்திரன் ஆகியோர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார்.
போஸ்டர் யுத்தம்
அதோடு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக பாலகங்காதரன், மத்திய மாவட்ட செயலாளராக தெய்வம், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளராக கதிரவன் ஆகியோரை நியமித்து அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து ஓபிஎஸ்ஸால் அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். இதன் காரணமாக ராஜேந்திர பாலாஜி தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது. மேலும் அடுத்தது நாங்கள் தான் அதிமுக எங்களுடையது எனவும் சமூக வலைதளங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பதிவிட்டு வருவதால் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியில் இருப்பதோடு பதிலடியும் கொடுத்து வருகின்றனர்.