தமிழகத்தில் பிற கட்சிகளை விட பா.ஜ.க.வில்தான் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு.. சொல்வது நிர்மலா சீதாராமன்
விருதுநகர்: பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் கே.டி. ராகவனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன.
கே.டி. ராகவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். நெட்டிசன்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தை யு டியூபரான மதன் ரவிச்சந்திரன் என்பவர்தான் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்.இதைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி. ராகவன் அறிவித்தார்.

''என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. என் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன்'' என்று கே.டி. ராகவன் விளக்கம் அளித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக உண்மையை கண்டறிய தமிழக பாஜக உடனடியாக விசாரணை குழு அமைத்தது.
மேலும் இது தொடர்பாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, '' பாரதிய ஜனதா கட்சியில் பொறுப்பிலும், நிர்வாகத்திலும் இருக்கும் பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறார்கள். மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள். ஒரு விசாரணைக் குழு அமைத்து சாட்டப்படும் குற்றங்களில் வீடியோ பதிவுகளில் உள்ள உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் கூறினார்.
'தமிழகத்தில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். கே.டி. ராகவன் உள்ளிட்ட பாஜக, அதிமுகவை சேர்ந்த பாலியல் குற்றவாளிகளை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்' என்று கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிடம் நேரடியாக புகார் மனு கொடுத்தார். இதேபோல் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் என்பவரும் கே.டி. ராகவன், மதன் ரவிச்சந்திரன் மீது புகார் கொடுத்தார்.
இந்த நிலையில் தமிழகத்திலேயே பாஜகவில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுளளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நிருபர்களிடம் பேட்டியளித்த அவர், ' தமிழகத்தில் மற்ற கட்சிகளை விட பாஜகதான் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கட்சியாக இருக்கிறது. ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, டெல்லி ரயில்வேயை தனியார் மயமாக்க ஒப்புதல் கொடுத்தார். ஆனால் அவர்தான் இப்போது பாஜக தனியார்மயமாக்குகிறது என்று விமர்சித்து வருகிறார் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.












Click it and Unblock the Notifications