இந்தியாவின் தலைமை “பெஸ்ட்”.. உலகுக்கே தலைமையேற்போம்! வெளிநாட்டில் இந்தியன் என்றால் பெருமை - ஆர்என் ரவி
விருதுநகர்: விரைவில் உலக நாடுகள் அனைத்திற்கும் இந்தியா தலைமை தாங்கும் என்றும், வெளிநாடுகளுக்கு சென்று இந்தியன் என்று சொன்னால் நமது பெருமை தெரிய வரும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் சுயாதீன கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்
ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் பேசிய அவர் இந்தியாவின் வளர்ச்சி குறித்தும், உலக அரங்கில் இந்தியாவின் நிலை பற்றியும் சிலாகித்து பேசினார்.

இந்தியா முன்னேற்றம்
"பல்வேறு துறைகளில் இந்தியா முன்னேற்றம் கண்டு வருகிறது. கல்வியிலும் முன்னேற்றம் அடைந்து உள்ளது. சிறப்பான தலைமையின் கீழ் இந்தியா செயல்பட்டு வருகிறது. நல்ல திட்டங்கள் நமக்கு கிடைத்துள்ளன. இந்தியாவுக்கு முன்பை காட்டிலும் தற்போது அதிக நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.

இந்தியாவுக்கு சிறந்த தலைமை
பல ஆண்டுக்கு முன் உலக நாடுகளை ஒப்பிடுகையில் நாம் நல்ல நிலையில் இல்லை. ஆனால், பல நாடுகள் இந்தியாவை நம்பிக்கையோடு நோக்குகின்றன. உலக அளவில் மூன்றாவது சிறந்த நாடாக இந்தியாவே இருந்து வருகிறது. நாட்டிற்கு மிகச்சிறப்பான தலைமை உள்ளது. இந்தியா சிறந்து விளங்குவதற்கு மிகச்சிறந்த தலைமையே காரணம்.

உலகிற்கே தலைமையேற்கும்
கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டது இந்தியா. பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறிய நாடாக இன்று இந்தியா திகழ்ந்து வருகிறது. விரைவில் உலகிற்கே தலைமை ஏற்கும் நாடாக இந்தியா உருவெடுக்கும். நாடு வளர்ந்தால் மட்டுமே நம்மால் வளர முடியும். வெளிநாடுகளுக்கு சென்று நாம் சொல்லும்போதுதான் இந்த மதிப்பை நம்மால் உணர்ந்திட இயலும்.

கலாச்சாரம்
வரும் 2047 ஆம் ஆண்டு நம் இந்தியா சுதந்திரம் பெற்று நூற்றாண்டை நிறைவு செய்கிறது. அந்த நேரம் இந்தியா ஒட்டுமொத்தமாக முன்னேற்றம் அடைந்த நாடாக இருக்கும். இந்தியாவில் இருக்கும் கலாச்சாரம் மற்ற நாடுகளில் இல்லை. நம் நாடு மட்டுமே ஆன்மீகத்திலும் சிறந்தது. கலாச்சாரத்தை நாம் போற்றுவோம்." என்றார்.












Click it and Unblock the Notifications