உயர் அதிகாரிகள் கொடுத்த மன அழுத்தம்?.. ரயில்வே ஊழியர் தற்கொலை.. மனைவி பரபரப்பு புகார்!
விருதுநகர்: தென்னக ரயில்வே ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது மரணத்துக்கு உயர் அதிகாரிகள் நெருக்கடியே காரணம் என்று அவர் உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மாந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் லிங்கம். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு லாவண்யா, ராஜேஸ்வரி என்ற இரு மகள்கள் உள்ளனர்.
லிங்கம் தென்னக ரயில்வேயில் மேஸ்திரி ஆக பணிபுரிந்து வருகிறார்.

விஷம் குடித்தார்
லிங்கம் அதிக பணிச்சுமையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. உடன் பணியாற்றும் அதிகாரிகள் சிலர் அவருக்கு மனரீதிரியாக கடும் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் உயர் அதிகாரி ஒருவர் தூத்துக்குடியில் உள்ள ரயில்வே போலீசிடம் லிங்கம் மீது பொய் புகார் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து கடுமையான மன உளைச்சலில் இருந்த லிங்கம், கடந்த 1-ம் தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

பரிதாபமாக உயிரிழந்தார்
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் கடந்த 14-ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். லிங்கம் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் உயர் அதிகாரிகள் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி சில அதிகாரிகளின் பெயரையும் கூறி இருந்தார்.

மனைவி பரபரப்பு புகார்
இந்த நிலையில் லிங்கத்தின் மனைவி விஜயலட்சுமி, தனது மகள்களுடன் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். உயர் அதிகாரிகள் கொடுத்த நெருக்கடி காரணமாகவே எனது கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவர் பதிவிட்டுள்ள வீடியோவை ஆதாரமாக கொண்டு இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.

வலுக்கும் கோரிக்கை
பணிச்சுமை காரணமாக ரயில்வே ஊழியர் தற்கொலை செய்து கொண்டது விருதுநகர் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. லிங்கம் மரணத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.












Click it and Unblock the Notifications