போஸ்ட் கார்டில் நன்றி சொன்ன 4ஆம் வகுப்பு மாணவி.. நெகிழ்ந்து போய் கலெக்டர் அனுப்பிய பதில் கடிதம்!
விருதுநகர் : விருதுநகரில் சமீபத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழா குறித்து மாவட்ட ஆட்சியருக்கு 4ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் தபால் அட்டையில் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பதில் கடிதம் எழுதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தக் கடிதத்தை விருதுநகர் கலெக்டர் மேகநாத ரெட்டி ட்விட்டரில் பதிவிட்ட நிலையில், அவரது பதிவு பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
விருதுநகரில் முதல் முறையாக அரசு சார்பில் புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, இந்த புத்தகக் கண்காட்சி ஏற்பாடுகளில் முழு ஈடுபாட்டுடன் சிறப்பாகப் பணியாற்றினார்.
முதல் புத்தக திருவிழா என்பதால் மக்களின் கவனத்தை பெற பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரை என பல்வேறு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இது பல்வேறு தரப்பிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
குட்டீஸ்களுக்கு குட் நியூஸ்! நாளையும் வண்டலூர் பூங்கா செயல்படும்.. பள்ளி விடுமுறை காரணமாக அறிவிப்பு!
விருதுநகர் புத்தகத் திருவிழா
பொதுமக்களிடமும், மாணவர்கள் மத்தியிலும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க ஒவ்வொரு ஆண்டும் மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த நவம்பர் 17 முதல் 27 ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த இந்தப் புத்தக கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், புத்தக வாசிப்பாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்று புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
மாணவி எழுதிய போஸ்ட் கார்டு
இந்நிலையில், மதுரை மாவட்டம் சின்னாரெட்டிபட்டியில் உள்ள ஆரம்பப்பள்ளி ஒன்றில் படிக்கும் 4ஆம் வகுப்பு மாணவி கு.காவியதர்ஷினி என்பவர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டிக்கு, "விருதுநகர் முதல் புத்தகத் திருவிழாவில் மகத்தான வெற்றி சாதனை படைத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் தங்களோடு பணியாற்றிய அனைவருக்கும் எங்களுடைய அன்பான வாழ்த்துகள்" எனக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
ஆட்சியர் பதில் கடிதம்
இந்தக் கடிதத்திற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "முதலாவது விருதுநகர் புத்தகத் திருவிழா குறித்த தங்களது வாழ்த்து மடல் கிடைக்கப்பெற்றது மிக்க மகிழ்ச்சி. மாணவச் செல்வங்களாகிய நீங்கள் உங்களுக்கான லட்சியம் ஒன்றை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். அதை அடைய முயற்சிக்கும்போது வரும் தடைகளை விடாமுயற்சியுடன் எதிர்கொண்டு இலட்சியத்தை அடைந்து வாழ்வில் வெற்றிபெற்று சந்தோஷமாக இருங்கள். அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்" எனத் தெரிவித்து பதில் கடிதம் எழுதி உள்ளார்.
பரவும் கலெக்டரின் ட்வீட்
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு தற்போது அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளி மாணவர் ஒருவர் சமீபத்தில் மழையின்போது பள்ளிக்கு விடுமுறை கேட்டதற்கு, "பாலே இங்க தேறல.. பாயாசம் கேட்குதா.." என்று கிண்டலாக பதிலளித்து இருந்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த ட்வீட் வெகுவாகப் பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது.