கெடு விதித்த அண்ணாமலை! செல்லமா.. விளையாட்டாதான் அடிச்சாரு.. சர்ச்சைக்கு எண்ட் கார்டு போட்ட கலாவதி!
விருதுநகர் : மனு அளிக்க வந்த பெண்ணை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தாக்கியதாக வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், அமைச்சர் தன் உறவினர் எனவும், தன்னை விளையாட்டாக செல்லமாக அடித்தார் என வீடியோவில் இருந்த கலாவதி கூறியுள்ளார்.
Recommended Video
விருதுநகர் மாவட்டம் பாலவனத்தம் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை தமிழக அரசின் சார்பில் இலவச ஆடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச ஆடுகளை வழங்கினார்.

அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
அமைச்சர் நிகழ்ச்சியை முடித்து விட்டு கிளம்பும் போது, அதே பகுதியைச் சேர்ந்த கலாவதி என்பவர் தனது தாய்க்கு முதியோர் உதவித்தொகை வேண்டி மனு அளித்தார். அப்போது தொடர்ந்து அவர் பேசிக் கொண்டே இருந்த நிலையில், மனுவை பெற்ற அமைச்சர் அந்த மனுவால் அந்த பெண்ணை தலையில் தட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது .

அண்ணாமலை கண்டனம்
மேலும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் 48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், " விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த திமுக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை தமிழக பாஜக முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!" இவ்வாறு அந்த பதிவில் கூறியிருந்தார்.

திடீர் திருப்பம்
இந்த விவகாரத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கும், தமிழக அரசுக்கும் களங்கத்தை ஏற்படுத்துவது போல் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மனு கொடுக்க வந்த ஏழைப் பெண்மணியை பேப்பரால் அமைச்சர் அடிக்கும் வீடியோ இணையத்தில் தொடர்ந்து பரவும் நிலையில், அமைச்சர் தன் உறவினர் எனவும், தன்னை விளையாட்டாக செல்லமாக அடித்தார் என வீடியோவில் இருந்த பெண் கூறியுள்ளார்.

பெண் விளக்கம்
அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தாக்கியதாக கூறப்பட்ட கலாவதி என்ற பெண் விருதுநகரில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் ராமச்சந்திரனை கடந்த 30 ஆண்டாக தங்களுக்கு தெரியும் எனவும், அமைச்சர் தன்னை விளையாட்டாகவும் செல்லமாகவும் பேப்பரால் தட்டியதாகவும், அன்று அளித்த மனுவிற்கு அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து விட்டதாகவும் கலாவதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications