அலாஸ்கா அருகே 8.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை விடுப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவின் அலாஸ்கா தீவுகள் அருகில் உள்ள கடலில் ரிக்டர் அளவில் 8.2 அளவுக்குப் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்கா தீவுகள் அருகே சற்று நேரத்திற்கு முன் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அலாஸ்காவின் பெர்ரிவில் நகரின் தென்கிழக்கில் 91 கிலோமீட்டர் தொலைவில் கடற்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.2ஆகப் பதிவாகியுள்ளது.
இதனால் தெற்கு அலாஸ்கா மற்றும் அலாஸ்கன் தீபகற்பத்திற்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் கடற்கரை பகுதிகளைச் சுனாமி தாக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கச் சுனாமி வார்னிங் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுழற்றியடிக்கும் கொரோனா சுனாமி -16.18 கோடி பேர் பாதிப்பு - 33.58 லட்சம் பேர் மரணம்
பசிபிக் ரிங் ஆஃப் பயர்-இல் அமைந்துள்ளதால் அலாஸ்காவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம் தான். கடந்த அக்டோபர் மாதம் இதேபோல ரிக்டரில் 7.5ஆகப் பதிவான நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டது. நல்வாய்ப்பாக அந்த சுனாமியில் யாரும் உயிரிழக்கவில்லை.
முன்னதாக 1964ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரிக்டர் அளவுகோலில் 9.2க்கு மோசமான நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அமெரிக்காவில் பதிவானதிலேயே சக்திவாய்ந்த நிலநடுக்கமாகக் கருதப்படும் இதில் சுமார் 250 பேர் பலியாகினர்.