சீன ஆய்வாளர்கள் கண்டறிந்த 24 புதிய கொரோனா வகைகள்.. கொரோனா எப்படி தோன்றியது? சீனா சொல்வது என்ன
வாஷிங்டன்: சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வௌவால்களில் இருந்து 24 புதிய வகை கொரோனா வைரஸை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
Recommended Video
கடந்த 2 ஆண்டுகளாகவே உலக நாடுகளைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருப்பது கொரோனா வைரஸ் தான். முதல் அலை, 2ஆம் அலை என அலை அலையாகத் தாக்கும் கொரோனாவால் உலக நாடுகள் திக்குமுக்காடிப் போயுள்ளன.
கொரோனா பாதிப்பால் பின்தங்கிய வளரும் நாடுகள் மட்டும் பாதிக்கப்படவில்லை. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளும்கூட கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தோற்றம்
இப்படி உலகையே புரட்டிப்போட்ட கொரோனாவின் தோற்றம் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கொரோனா தோற்றம் குறித்து முறையான மற்றும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. வௌவால்களில் இருந்தே மனிதர்களுக்கு கொரோனா பரவியதாகச் சீனா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், உலகின் பல நாடுகளும் இதை நம்ப மறுக்கின்றன. வூஹான் வைராலஜி மையத்தில் இருந்தே கொரோனா பரவியிருக்கும் என உலக நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன.
சீன ஆய்வாளர்கள்
இந்தச் சூழ்நிலையில், சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய வகை கொரோனா வைரஸ்களை காடுகளில் இருந்து சேகரித்துள்ளதாக அறிவித்துள்ளனர். வௌவால்கள் மத்தியில் எத்தனை கொரோனா வகைகள் உள்ளன என்பது குறித்தும் அதில் எத்தனை வகைகள் மனிதர்களுக்குப் பரவும் அபாயம் உள்ளது என்பது குறித்தும் கண்டறிய இது உதவும் எனச் சீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
24 கொரோனா வகைகள்
ஜெர்னல் செல் இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில், "வௌவால்களில் இருந்து மொத்தம் 24 கொரோனா வைரஸ்களை நாங்கள் சேகரித்துள்ளோம். அதில் நான்கு கொரோனா வகைகள் தற்போது பரவும் கோவிட் 19 வைரசுக்கு ஒத்து இருந்தது" என அதில் தெரிவித்துள்ளனர். கடந்த 2019 மே மாதம் முதல் 2020 நவம்பர் மாதம் வரை சீனாவின் சிறிய காடுகளில் வசிக்கும் வெளவால்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. வௌவால்களின் கழிவு மற்றும் வாயிலிருந்து எடுக்கப்பட்ட எச்சில்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
வூஹான் மையம்
கொரோனா வைரஸ் வூஹான் வைராலஜி மையத்தில் இருந்து கொரோனா பரவியிருக்கலாம் என்ற கருத்து ஒவ்வொரு நாளும் வலுவாகி வரும் நிலையில் சீனா ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் வௌவால்களில் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பு அதிகம் என அவர்கள் கூறியுள்ளனர். இது கொரோனா தோற்றம் குறித்த விசாரணையைத் திசைதிருப்ப நடத்தப்படும் முயற்சியா என்றும் சில ஆய்வாளர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.