உச்சம் தொடும் உலக மக்கள் தொகை.. ஐ.நா ரிப்போர்ட்.. இந்தியாவை பற்றி என்ன சொல்லி இருக்கு தெரியுமா?
வாஷிங்டன்: உலக மக்கள் தொகை வரும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் 800 கோடியை தாண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல், உலகின் மிகுந்த மக்கள் தொகை நாடாக வரும் 2023 ஆம் ஆண்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதல், பருவநிலை மாறுபாடு என இன்று உலகம் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் தொகை அதிகரிப்பும் ஒரு முக்கிய காரணியாக சொல்லப்படுகிறது.
மித மிஞ்சிய நுகர்வு மற்றும் பூமியின் வளங்கள் அதிகப்படியான சூறையாடல் போன்றவையால் மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் என்றும் பூமியின் தாங்கு திறனை மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து வருவதே பெரும் சிக்கலாக அமையும் என்பது ஆய்வாளர்கள் ஒரு தரப்பினர் கருத்தாக உள்ளது.
1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு
அதேபோல் இதற்கு நேர்மாறான கருத்துக்களும் வாதங்களும் முன்வைக்கப்படாமலும் இல்லை. இந்த நிலையில், உலக மக்கள் வரும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் 800 கோடியை தாண்டும் என்ற ஐநா அறிக்கை பரவி வருகிறது. உலக மக்கள் தொகை தினமான ஜூலை 11 ஆம் தேதியே மக்கள் தொகை தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் இந்த அறிக்கை வெளியாகிவிட்டது. எனினும், ஐநா வெளியிட்ட அறிக்கையின் காலக்கெடு நெருங்கியுள்ளதால் மீண்டும் இந்த அறிக்கை கவனம் பெற்றுள்ளது. அதேபோல், 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக கடந்த 2020 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை வளர்ச்சி சரிவு அடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள்
அதுவும் காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா ஆகிய 8 நாடுகளில் மட்டும் 2050ல் அதிகரிக்கும் மக்கள் தொகையில் பாதி அளவு பங்களிப்பு இருக்கும் என்றும் ஐநா கூறியுள்ளது. ஐநா அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: உலக மக்கள் தொகை 2030 ஆம் ஆண்டிற்குள் 850 கோடியை தாண்டும். 2050 ஆம் ஆண்டிற்குள் 970 கோடியை தாண்டும்.
சீனாவை பின்னுக்கு தள்ளி..
2080 ஆம் ஆண்டுகளில் மக்கள் தொகை உச்சத்தை எட்டி ஆயிரம் கோடியை தாண்டி விடும். 2100 ஆம் ஆண்டு வரை இதே லெவலில் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக மக்கள் தொகை வரும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் 800 கோடியை தாண்டும். அதேபோல், உலகின் மிகுந்த மக்கள் தொகை நாடாக வரும் 2023 ஆம் ஆண்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் பொருளாதார வளர்ச்சி
பெரும்பாலான சப் சகாரா ஆப்ரிக்க நாடுகள், ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் பகுதிகளில் பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களே சமீபத்திய கருவுறுதல் சரிவுக்கு காரணமாக உள்ளது. உழைக்கும் வயது ( 25 முதல் 64 வரை) மக்கள் தொகையின் இந்த வளர்ச்சியால் தனிநபர் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 150 கோடி மக்கள்
ஐநா வெளியிட்ட தகவலின் படி சீனாவின் மக்கள் தொகை 141 கோடியாகும். இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் மக்கள் தொகை 134 கோடியாகும். வெகு விரைவில் சீனாவை மிஞ்சி இந்தியா முதலிடத்தை பிடித்து விடும் என்று ஐநா தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டில் இந்தியாவில் 150 கோடி மக்கள் இருப்பார்கள் என்றும் ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.