துபாயில் இருந்தபடி H-1B விசாவுக்கு விண்ணப்பித்த இந்தியர்.. அடுத்து சர்ப்ரைஸ்! துளியும் எதிர்பார்க்கல
துபாய்: அமெரிக்காவில் விசா கெடுபிடிகள் அதிகரித்துவிட்ட நிலையில், இந்தியாவில் பல ஆயிரம் பேர் தங்கள் H-1B விசாவை புதுப்பிக்க முடியாமல் அல்லது புதிய விண்ணப்பம் பிராசஸ் ஆகாமல் சிக்கலில் மாட்டியுள்ளனர். ஆனால், இந்தியர் ஒருவர் துபாயில் இருந்தபடியே தனது H-1B விசாவை புதுப்பித்து இருக்கிறார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
கடந்த பல சில மாதங்களாகவே அமெரிக்காவுக்கான விசா விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் விசா கோரி விண்ணப்பித்த பல ஆயிரம் பேருக்கு இன்னும் விசா கிடைக்கவில்லை. இதற்கிடையே துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவர், தனது H-1B விசாவை புதுப்பித்தல் அனுபவத்தை ரெட்டிட் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

துபாயில் இருந்து விண்ணப்பம்
இந்தியக் குடியுரிமை பெற்ற அவர் ஹெச்-1பி விசாவை வைத்துள்ளார். அத்தோடு துபாய் குடியுரிமை விசாவும் (Dubai residency visa) அவரிடம் இருந்துள்ளது. இதனால் அவர் துபாயில் இருந்து ஹெச்-1பி விசாவை புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர், "ஆம், உங்கள் சொந்த நாட்டைத் தவிர்த்து வேறு நாடுகளிலிருந்தும் H-1B விசாவுக்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும், ஆனால் அதற்கு அந்த நாட்டில் செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி கட்டாயம் இருக்க வேண்டும்" என்று அவர் தெளிவுபடுத்தினார்.
விதிகள் என்ன!
துபாயில் இருந்த அமெரிக்க அதிகாரிகள் எமிரேட்ஸ் அடையாள அட்டையைச் சரிபார்த்தனர். H-1B விசா நேர்காணலைச் சொந்த நாட்டிலேயே திட்டமிடுவது சிறந்தது என அறிவுறுத்தினார். சொந்த நாட்டைத் தவிர வேறு இடத்திலிருந்து H-1B விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றாலும் அப்படிச் செய்யும்போது விசா உறுதியாகக் கிடைக்கும் எனச் சொல்ல முடியாது என்றும் மேலும் செலுத்தப்பட்ட கட்டணங்கள் திரும்பப் பெறப்படாது என்றும் அமெரிக்கா வெளியுறவுத் துறை தெளிவாகக் கூறியுள்ளது. இருந்தாலும், அந்த நபர் துபாயிலேயே H-1B விசாவை புதுப்பிக்க விண்ணப்பித்து இருக்கிறார்.
காரணம் என்ன
முதலில் அவர் இந்தியாவிலேயே விசாவை புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளார். அவரது நேர்காணல் இந்தியாவில் டிசம்பர் 15ஆம் தேதிக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், அப்போது இந்தியாவில் பலருடைய நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டு மத கணக்கில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதில் இவரது நேர்காணலும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாகவே அவர் வேறு வழியில்லாமல் துபாயில் விண்ணப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும், "துபாயில் நடந்த விசா புதுப்பித்தல் செயல்முறை எளிமையாக இருந்தது. பாதுகாப்பு சோதனையில், செல்போன் மற்றும் சாவிகளைப் பத்திரமாக வைக்க இலவசமாகவே ஒரு இடத்தை வைத்திருந்தனர். மேலும், அமெரிக்கத் தூதரகத்தில் கூட்டமும் கூட குறைவாகவே இருந்தது. அலுவலகத்திற்குள் நுழைந்ததும், மூன்று தனித்தனி கவுண்டர்களில் மூன்று நிலைகள் இருந்தன. ஒவ்வொரு நிலைக்கும் காத்திருக்கும் நேரம் 5 நிமிடங்கள் கூட இல்லை.
ரொம்ப ஈஸி
முதலில் பாஸ்போர்ட்டை செக் செய்தனர். அடுத்த கவுண்டரில் i797, எமிரேட்ஸ் ஐடி சரிபார்ப்பு நடந்தது. பிறகு கடைசியில் பயோமெட்ரிக்ஸ் மற்றும் நேர்காணல் ஆகியவை நடந்தது.. அவர்களிடம் பழைய போட்டோ இருந்ததால் அதற்குப் பதிலாக அங்கேயே புதிதாகப் போட்டோ ஒன்றை எடுத்துள்ளனர். அடுத்து நேர்காணலுமே கூட எளிமையாகவே இருந்ததாம்.
எங்கே படித்தார், எப்போது முதல் அமெரிக்காவில் வசிக்கிறார், பணி, இருப்பிடம் குறித்துக் கேட்டுள்ளார். மேலும், தற்போதைய சம்பளம், குடும்பத்தில் வேறு யார் இருக்கிறார்கள் உள்ளிட்ட கேள்விகளையும் கேட்டுள்ளனர். இது தவிர துபாயில் உள்ள குடும்ப உறுப்பினர்கள், பெற்றோரின் தொழில் குறித்த தனிப்பட்ட கேள்விகளும் எழுப்பப்பட்டன. இவை அனைத்திற்கும் தெளிவான பதிலைக் கொடுத்துள்ளார்.
ஒப்புதல் கிடைத்துவிட்டது
அவ்வளவு தான் விசா ஒப்புதல் கிடைத்துவிட்டது. அடுத்த 5 முதல் 7 நாட்களில் எல்லா பிராசஸும் முடியும் எனக் கூறியுள்ளனர். விசா கோரி விண்ணப்பிப்போரின் சமூக வலைத்தளங்களை செக் செய்வோம் எனக் கூறப்பட்டு இருந்தும் இதுபோல எந்தவொரு கேள்வியும் இடம்பெறவில்லையாம். மேலும், சமூக வலைத்தளங்களையும் செக் செய்தது போலத் தெரியவில்லை என அந்த நபர் குறிப்பிட்டார். இதே சமூக வலைத்தளங்களை செக் செய்வதாகச் சொல்லியே இந்தியாவில் பல ஆயிரம் பேரின் நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications