கனடா, அமெரிக்காவில் வீசும் வெப்ப அலை வெறும் ட்ரைலர்தானாம்..மெயின் பிக்சரே இனிதான் இருக்காம்
கடும் வெயில் தாக்கி வெப்ப அலைகள் உருவானதால் வெப்பத்திலிருந்து தங்கள் நாட்டு மக்களைக் காக்க, பொது இடங்களில் செயற்கை நீரூற்று அமைத்தும், குளிர்சாதன வசதி செய்யப்பட்ட தற்காலிக குளிர்ச்சியான மையங்கள் அமெரிக்கா, கனடா நாட்டு அர
வாஷிங்டன்: கனடா மற்றும் அமெரிக்காவில் வரலாறு காணாத வெப்பநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் சூரியனால் தார் சாலைகள் உருகி வருகின்றன. தாறுமாறாக வீசும் வெப்ப அலையால் மேற்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இந்த வெப்ப அலை வெறும் ஆரம்பம்தான் என்றும் ஜூலை மாதத்தில்தான் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என அந்நாடுகளின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனடாவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் கடும் அனல் காற்று வீசி வருகிறது. இங்குள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த வாரம், 45 டிகிரி செல்சியசாக பதிவான வெப்பநிலை, தற்போது, 49.5 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது. வான்கூவர் நகரில் மட்டும் அனல் காற்றுக்கு 134 பேர் பலியாகியுள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில், கடந்த 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் அனல் காற்று மற்றும் வெப்பத்துக்கு 486 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடும் வெப்பம், அனல் காற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா மாகாணம், காட்டுத்தீயாலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பம் காரணமாக, மேற்கு கனடாவில் உள்ள வனப்பகுதியில் தீப்பிடித்துள்ளது. தீ வேகமாக பரவி வருவதையடுத்து, வனப்பகுதியை ஒட்டியுள்ள பிரிட்டீஷ் கொலம்பியா மாகாணத்தின் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நீர் நிலைகளை நாடும் மக்கள்
கனடாவில் அனல் காற்று தொடர்ந்து வீசும் என வானிலை மைய ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளதால், பொதுமக்கள்பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெப்பத்தை தணிக்க கடற்கரைகளிலும், நீச்சல் குளங்களிலும் குவிந்து கிடக்கும் நிலைக்கு, பெரும்பாலானோர் தள்ளப்பட்டுள்ளனர். கடும் வெப்பம் காரணமாக கனடாவின் பல பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

சுட்டெரிக்கும் சூரியன்
கனடா நாட்டின் வான்கூவர் மாகாணத்தில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவாக 49 டிகிரி செல்சியஸ்க்கும் மேலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. சுட்டெரிக்கும் சூரியனால் உருவான வெப்ப அலையானது ஒட்டுமொத்த வடமேற்கு பசிபிக் பகுதியையும் வாட்டிவருகிறது. இதன் காரணமாக இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

தடுப்பூசி மையங்கள் மூடல்
வெப்ப அலை காரணமாக வான்கூவர் பகுதியில் பள்ளிகள், கொரோனா தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன. வீதிகளில் ஆங்காங்கே மக்கள் தங்களை குளிர்ச்சியூட்டிக்கொள்ள தற்காலிக நீரூற்றுகளையும் பனிப்புகை நிலையங்களையும் அரசு உருவாக்கியுள்ளது. மக்களின் தாகம் தீர்க்க குடிநீர் பாட்டில்களையும் தொப்பிகளையும் அரசு வழங்கி வருகிறது.

வாஷிங்டன்
கனடா மட்டுமின்றி, அமெரிக்காவின் மேற்கு பகுதியிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. அமெரிக்காவின் வடமேற்கு மாகாணமான வாஷிங்டனில் 16 பேர் வெயிலுக்கு பலியாகியுள்ளனர்.

வெப்பக்குவிமாடம்
பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்ப குவிமாடம் Heat Dome எனும் நிகழ்வே காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பசிபிக் பகுதியின் வளிமண்டலத்தில் உயர் அழுத்தநிலை ஏற்படும்போது பசிபிக் பெருங்கடலிலிருந்து வரும் காற்றை, இந்த உயர் அழுத்தநிலை உறிஞ்சிக்கொள்ளும். இதனால்தான் வெப்பநிலை உயர்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தற்போது இவை ஏற்படுவது அதிகரித்துள்ளது.

இன்னும்
கனடாவின் மேற்கு பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா, வான்கூவர் மற்றும் அமெரிக்காவின் சியாட்டல் பகுதிகள் வெப்ப அலை ஏற்பட்டுள்ளது. இது வெறும் ஆரம்பம்தான் என்றும் வெயிலின் உச்சம் ஜூலை மாதத்தில்தான் அதிகமாக இருக்கும் என அந்நாடுகளின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications