ஒரே ட்வீட்டில் ஊழியரை வீட்டுக்கு அனுப்பிய எலான் மஸ்க்! "என்கிட்டயே கேள்வி கேட்கிறயா!" அடாவடி சம்பவம்
வாஷிங்டன்: ட்விட்டர் புதிய உரிமையாளர் எலான் மஸ்க் இப்போது எடுத்துள்ள ஒரு அடாவடி முடிவு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே எலான் மஸ்க் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல் நாளே அவர் டாப் அதிகாரிகளை அதிரடியாக நீக்கினார்.
அடுத்தகட்டமாக சுமார் 7000 ஊழியர்களைக் கொண்ட ட்விட்டரில் அதிரடி பணி நீக்கத்தைக் கொண்டு வந்தார். இதில் சுமார் 3000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.

ட்விட்டர்
ட்விட்டர் நிறுவனத்தில் எலான் மஸ்க் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் பலரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ட்விட்டர் ஊழியர்களே எலான் மஸ்க் மீது கடுப்பில் உள்ளனர். அதேபோல ப்ளு டிக் வசதிக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட சர்ச்சை அறிவிப்புகளால் எலான் மஸ்க் மீது நெட்டிசன்கள் கோபத்தில் உள்ளனர். பலரது அறிவுரையைக் கண்டுகொள்ளாமல் அமல்படுத்தப்பட்ட ப்ளு டிக் வசதியால் பல போலி கணக்குகள் ப்ளு டிக் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடாவடி
தன் சொன்னதை ஊழியர்கள் எப்படியே செய்ய வேண்டும் என்பதே எலான் மஸ்க்கின் எதிர்பார்ப்பு. அவரை ட்விட்டர் ஊழியர்கள் கேள்வி கேட்பதை அவர் விரும்புவதில்லை போல.. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவரிடம் ஊழியர்கள் யாருமே எந்தவொரு கேள்வியும் கேட்க கூடாது என்று விரும்புகிறார் போல..! அவரிடம் கேள்வி கேட்ட மூத்த பொறியாளர் ஒருவரை மஸக் உடனடியாக டிஸ்மிஸ் செய்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

என்ன நடந்தது
ட்விட்டர் ஆட்குறைப்பு நடவடிக்கையால் சமீபத்தில் தான் சுமார் 3000 ஊழியர்களை பணியை இழந்தனர். அதில் இருந்து தப்பிய மூத்த இன்ஜினியர் எரிக் ஃப்ரோன்ஹோஃபர் ட்விட்டரில் எஸ்குடன் வாதிட்டதால் வேலையில் இருந்து தூக்கப்பட்டு உள்ளார். அவரை வேலையைவிட்டுத் தூக்கியதாக மஸ்க் ட்விட்டரிலேயே அறிவித்தார். இருப்பினும், ஏதோ சில காரணங்களால் அந்த ட்வீட்டை மட்டும் எலான் மஸ்க் கொஞ்ச நேரத்திலேயே டெலிட் செய்துவிட்டார்.

விவாதம்
ட்விட்டர் சில நாடுகளில் மெதுவாக இருப்பது குறித்த விவாதத்தில் தான் இது நடந்து உள்ளது. எலான் மஸ்க் தனது ட்விட்டரில், ""பல நாடுகளில் ட்விட்டர் மிகவும் மெதுவாக இருக்கிறது. இதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டார். அதற்குப் பதிலளித்த ஃப்ரோன்ஹோஃபர், "நான் ஆண்ட்ராய்டுக்கான ட்விட்டரில் 6 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். இதில் எந்தவொரு தவறும் இருப்பதாகத் தெரியவில்லை" என்று பதில் அளித்துள்ளார்.

3 மணி நேரமாக
அத்துடன் இந்த விவாதம் நின்றுவிடவில்லை. இருவருமே மாறி மாறி தொழில்நுட்ப கோளாறுகள் குறித்துப் பேசிக் கொண்டே போனார்கள். ஒரு கட்டத்தில் எலான் மஸ்க், "ஆன்டிராய்ட் சாதனங்களில் ட்விட்டர் ரொம்பவே மெதுவாக இருக்கிறது. அதைச் சரி செய்ய நீங்கள் என்ன தான் செய்துள்ளீர்கள்" எனக் கேட்டார். சுமார் மூன்று மணி நேரம் இருவரும் மாறி மாறி இது தொடர்பாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

டிஸ்மிஸ்
நெட்டிசன்கள் பலரும் இந்த விவாதத்தில் குதித்தனர். எரிக் பொதுவெளியில் இப்படிப் பேசக் கூடாது என்றும் மஸ்கிடம் தனிப்பட்ட முறையில் பேசியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். அதற்குப் பதிலளித்த எரிக், "மஸ்க் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டிருந்தால், நானும் அப்படியே பதிலளித்திருப்பேன். அவர் தான் பொதுவெளியில் இதைப் பேசத் தொடங்கினார்" என்றார். எலான் மஸ்க், எரிக் இடையே விவாதம் தொடர்ந்த நிலையில், ஒரு கட்டத்தில் கடுப்பான எஸ்க், எரிக்கை டிஸ்மிஸ் செய்வதாக ட்விட்டரிலேயே அறிவித்தார்.

பரபரப்பு
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு எரிக் அளித்த பேட்டியில், "எனக்கு பணிநீக்கம் குறித்து மெயில் எதுவும் வரவில்லை. திடீரென எனது லேப்டாப் ஆப் ஆகிவிட்டது. என்னால் லேப்டாப்பை ஆன் செய்யக் கூட முடியவில்லை. மேலும், நிறுவனத்தில் இப்போது யாருக்கும் யார் மீதும் நம்பிக்கையில்லை. இப்படியிருந்தால், யாராலும் எதையும் செய்ய முடியாது" என்றார். அவர் 8 ஆண்டுகளுக்கும் மேலாக ட்விட்டரில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications