தவறான முடிவுகள்.. வேகமாக வாபஸ் பெறப்பட்ட ஊரடங்கு.. இந்தியாவில் கொரோனா மோசமாக காரணம்.. ஆன்டனி பவுசி
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் முடிந்துவிட்டதாகக் கருதி இந்தியா முன்கூட்டியே தளர்வுகளை அறிவித்து, வழக்கான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியதே, வைரஸ் பரவல் மீண்டும் மிக மோசமான நிலைக்குச் செல்ல காரணம் என்று அமெரிக்கத் தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஆன்டனி பவுசி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. முதல் அலையைக் காட்டிலும் வைரஸ் பாதிப்பு மிக மோசமாக உள்ளது. கடந்த சில தினங்களாகவே வைரஸ் பாதிப்பு மூன்று லட்சத்தைக் கடந்தே பதிவாகி வருகிறது.
நாட்டிலுள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன. பல்வேறு மாநிலங்களிலும் சுகாதார ஊழியர்கள், தடுப்பூசி ஆக்சிஜன் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தவறான அனுமானம்
கொரோனா பரவல் குறித்த தவறான அனுமானமே இந்தியாவில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணம் எனத் தொற்றுநோய் நிபுணர் ஆன்டனி பவுசி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "இந்தியாவில் கொரோனா பரவலின் முதல் அலை ஏற்பட்டபோது; அது முடித்துவிட்டதாகத் தவறாகக் கருதினர். முன்கூட்டியே தளர்வுகளை அறிவித்து, வழக்கான நடவடிக்கைகளில் தொடங்கினர். இதனால்தான் இப்போது வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இது மிக மோசமான அழிவை ஏற்படுத்துகிறது" என்று அவர் தெரிவித்தார்.
எங்கு இருந்தாலும் ஆபத்து தான்
கொரோனா பாதிப்பு குறித்து அமெரிக்க சுகாதார குழு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் போது பவுசி இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தைத் தலைமை தாங்கிய ஜனநாயக கட்சி எம்பி பாட்டி முர்ரே, இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையால் ஏற்பட்டுள்ள பேரழிவு வேதனையை ஏற்படுத்துவதாகவும் உலகில் அனைத்து நாடுகளிலும் கொரோனா தாக்கம் ஓயும் வரை அமெரிக்காவில் கொரோனாவை ஒழிக்க முடியாது என்பதை இது நினைவுபடுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுச் சுகாதார கட்டமைப்பு
தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த கொரோனாவின் 2ஆம் அலை பொது சுகாதார கட்டமைப்பு ஒரு நாட்டிற்கு எந்தளவுக்கு முக்கியம் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. வரும் காலங்களில் ஏற்படும் பெருந்தொற்றுகளை சமாளிக்க அமெரிக்காவில் வலுவான பொதுச் சுகாதார உள்கட்டமைப்பு எந்தளவுக்கு அவசியம் என்பதையே இது அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் பாட்டி முர்ரே குறிப்பிட்டார்.
கற்க வேண்டிய பாடங்கள்
இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா அலையிலிருந்து கற்க வேண்டிய பாடம் என்ன என்பது குறித்து ஆன்டனி பவுசி கூறுகையில், முதல் விஷயம் ஒருபோதும் நிலைமையைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். இரண்டாவதாக எப்போது தயார் நிலையில் இருக்கும் பொதுச் சுகாதாரம் நமக்குத் தேவை. அனைத்து நிலைகளிலும் சிறப்பாகச் செயல்படும் பொதுச் சுகாதார உள்கட்டமைப்பைத் தொடர்ந்து நாம் உருவாக்க வேண்டும். உண்மையைச் சொல்லப்போனால் கடந்த 10 ஆண்டுகளாக நம் நாட்டின் பொதுச்சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்து விட்டது. எனவே, அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
அனைத்து நாடுகளுக்கும் ஆபத்து
மற்றொரு முக்கிய பாடம் என்னவென்றால், இந்த உலகளாவிய பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த உலக நாடுகளின் கூட்ட முயற்சி தேவை. நம் சொந்த நாட்டின் மட்டுமல்லாது, அனைத்து நாடுகளுக்கும் தேவையான மருத்துவ பொருட்கள், குறிப்பாகத் தடுப்பூசிகள் சரியான நேரத்தில் கிடைக்கப் பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஏனென்றால் உலகின் எந்தப் பகுதியில் வைரஸ் இருந்தாலும் அது அமெரிக்காவுக்கும் அச்சுறுதல் தான். இவை தான் இந்தியாவிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடங்கள்" என்றார்.
பைடன் நிர்வாகம்
உலகில் அனைத்து நாடுகளிலும் கொரோனா ஒழியும் வரை எந்த நாடும் கொரோனாவை ஒழித்துவிட்டதாகக் கூற முடியாது என்று தெரிவித்த பாட்டி முர்ரே, இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த பைடன் நிர்வாகம் தேவையான மருத்துவ பொருட்களை அனுப்பி உதவுவதாகத் தெரிவித்தார். இது இந்திய மக்களை மட்டுமின்றி அமெரிக்கர்களையும் காக்க தான் என்று அவர் தெரிவித்தார்.