இந்திய மக்கள் சந்தோஷமா இல்லை.. ஐநா சர்வேயில் 139வது இடம்தான்! பாகிஸ்தான், வங்கதேசம் கூட முந்திடுச்சி
வாஷிங்டன்: அனைத்து உலக நாடுகளிலும் மக்கள் எந்த மாதிரி மனநிலையில் இருக்கிறார்கள், என்பது பற்றி, ஐக்கிய நாடுகள் சபை ஒரு ஆய்வை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி.. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்று ஒரு ஆய்வை நடத்தியுள்ளது ஐ.நா.
மொத்தம் 149 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 139வது இடத்தில்தான் இருக்கிறது இந்தியா.
பாகிஸ்தான் முந்திடுச்சே
இந்தியாவை விடவும், பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளில் உள்ள மக்கள் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உண்மைதானுங்க. இந்த பட்டியலில் பாகிஸ்தான் 105வது இடத்தில் இருக்கு. சீனா 84, இலங்கை 129, வங்கதேசம் 101வது இடத்தில் இருக்கிறது.
பக்கத்து நாடுகள் பரவாயில்லை
அதாவது நமது அண்டை நாடுகளிலேயே, சீனா மக்கள்தான் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்காங்க. அதற்கு அடுத்த இடத்தில் வங்கதேசம் இருக்கிறது. அதற்கு பிறகு பாகிஸ்தான், அதற்குப் பிறகு இலங்கை போன்ற நாடுகள் இருக்கின்றன. அந்தவகையில் நாம் தான் இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறோம்.
நமக்கும் கீழே 10 நாடுகள்தான்
கணக்கெடுப்பு நடைபெற்றது 149 நாடுகளில். எனவே ஒட்டு மொத்தமாக பார்த்தால், நமக்கு கீழே 10 நாடுகள்தான் உள்ளன. புருண்டி, ஏமன், தான்சானியா, ஹைதி, மலாவி, லெசோத்தோ, போட்ஸ்வானா, ருவாண்டா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் நமக்கு கீழே இருக்கின்றன. இவை அனைத்துமே பொருளாதாரம் மற்றும் மனித வள மேம்பாடு உள்ளிட்ட பிற விஷயங்களில் உலகத்திலேயே மிக மோசமான நிலையில் இருக்கக்கூடிய நாடுகள். துரதிர்ஷ்டவசமாக. நமது நாடு இந்த நாடுகளின் பட்டியலுக்கு நெருக்கமாக இருக்கிறது.
வாழ்க்கையில் எந்த நிலை
வாழ்க்கையை பற்றிய மதிப்பீடு, பாசிட்டிவ் எண்ணங்கள், நெகட்டிவ் எண்ணங்கள் ஆகிய மூன்று பிரிவின்கீழ் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். இந்த கருத்துக்களின் அடிப்படையில் இந்த ரேங்க் தயாரிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை பற்றிய மதிப்பீடு என்ற பிரிவின்கீழ் பொதுமக்களிடம் ஒரு கேள்வி கேட்கப்படும். அதாவது.. நீங்கள் ஒரு ஏணியை மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஏணியின் படிக்கட்டுகளை பூஜ்ஜியம் முதல் 10 என்று வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். அதாவது கீழே உள்ள படிக்கட்டு பூஜ்ஜியம். கடைசியில் உள்ள படிக்கட்டு 10. இதில் உங்களது வாழ்க்கை எந்த படிக்கட்டில் இருக்கிறது என்று நினைக்கிறீர்களோ அந்த நம்பரை சொல்லுங்கள் என்று கேட்டுள்ளனர். இப்படியாக கொடுக்கப்பட்ட நம்பர் அடிப்படையில் பார்த்தால் இந்தியர்கள் வாழ்க்கை அவ்வளவு சிறப்பானதாக இல்லை என்று தெரிகிறது.
பாசிட்டிவ்
பாசிட்டிவ் எண்ணங்கள் என்ற பிரிவின்கீழ் மூன்று ஆப்ஷன்கள் தரப்படுகின்றன. மகிழ்ச்சி, சிரிப்பு, என்ஜாய்மென்ட் ஆகியவற்றில் எந்த நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டு அதற்கு பதில் வாங்கப்பட்டுள்ளது. நெகட்டிவ் மனநிலை என்ற பிரிவின் கீழ் மொத்தம் மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. யோசனை, சோகம், கோபம் என்று மனநிலைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
கோபம்
யோசனை என்று நீங்கள் டிக் செய்தால் ஏதோ பரவாயில்லை என்று சொல்லலாம். சோகம் என்று டிக் செய்தால் கொஞ்சம் மோசம். கோபம் வருகிறது என்று சொன்னால் வாழ்க்கையின் மோசமான நிலையில் உச்சத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். இவ்வாறு அந்த மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன.