டிரம்ப்பால் அமெரிக்காவுக்கு விழுந்த அடி.. இந்தியா உட்பட சர்வதேச மாணவர்கள் எடுத்த முடிவால் திணறுதே!
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் விசா நடைமுறைகளில் கடுமையா காட்ட ஆரம்பித்துள்ளது. இதனால் அங்கு வெளிநாட்டினர் செல்லவே ஒரு முறைக்குப் பல முறை யோசிக்கிறார்கள். இதற்கிடையே இந்த ஒரே ஆண்டில் அமெரிக்காவுக்குச் செல்லும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை கடுமையாகச் சரிந்துள்ளதாம். இந்திய மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததே இதற்குப் பிரதானக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் தொடக்கம் முதலே வெளிநாட்டினருக்கு எதிரான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். டிரம்ப் அரசு வந்த பிறகு குடியேற்ற அதிகாரிகளும் விசா நடைமுறைகளில் கெடுபிடி காட்ட ஆரம்பித்துள்ளனர். இதன் விளைவுகள் இப்போது அமெரிக்காவில் தெரிய ஆரம்பித்துவிட்டது.

கடும் சரிவு
அதாவது அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் தகவல்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் அமெரிக்கக் கல்லூரிகளில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போதும் அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் இந்தியர்களே அதிகம் இருப்பார்கள். மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியர்களே அமெரிக்கா சென்று கல்வி கற்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், இந்தாண்டு நிலைமை மாறியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள கிட்டத்தட்ட எல்லாக் கல்வி நிறுவனங்களும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஒட்டுமொத்தமாக, புதிய சர்வதேச மாணவர் சேர்க்கை அமெரிக்காவில் 17% வரை சரிந்துள்ளது.
அமெரிக்கக் கல்லூரிகள்
டிரம்ப் அரசு கொண்டுவந்த கடுமையான மாணவர் விசா விதிகள் மற்றும் கொள்கைகளே இந்தச் சரிவுக்குக் காரணம் என்று அமெரிக்கக் கல்வித்துறை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இது தொடர்பாக ஐஐஇ எனப்படும் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் எஜுகேஷன் என்ற அமைப்பு 825 அமெரிக்கக் கல்வி நிறுவனங்களிடம் ஆய்வுகளை நடத்தின. அதில் கிட்டத்தட்ட 96% நிறுவனங்கள் விசா விண்ணப்ப நடைமுறைகளில் உள்ள சிக்கலே வெளிநாட்டு மாணவர்கள் சரிவுக்குக் காரணம் என்கிறார்கள். அதேபோல 68% கல்வி நிறுவனங்கள் பயணக் கட்டுப்பாடுகளைக் காரணமாகச் சொல்கிறார்கள்.
காரணம் என்ன!
டிரம்ப் நிர்வாகம் முதலில் சட்டவிரோதக் குடியேறிகள் மீது நடவடிக்கை எடுத்தாலும் கூட அடுத்து விரைவில் சட்டப்பூர்வ குடியேறிகள் மீதும் டிரம்ப் அரசு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது. ஒரு அமெரிக்கக் கல்லூரியில் எத்தனை வெளிநாட்டு மாணவர்கள் படிக்கலாம் என்பதில் கட்டுப்பாடு கொண்டு வர டிரம்ப் அரசு முயல்கிறது.. மேலும், வெளிநாட்டு மாணவர்களின் சோஷியல் மீடியோ போஸ்ட்களை கூட ஆய்வு செய்தது. இதுபோன்ற நடவடிக்கைகள் வெளிநாட்டு மாணவர்களின் வருகையை நேரடியாகப் பாதித்தன.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் வெளிநாட்டு மாணவர்களால் அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் மிக பெரியளவில் லாபமடையவே செய்கிறது. 2024-25 கல்வியாண்டில் சுமார் 1.2 மில்லியன் சர்வதேச மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயின்றனர். அவர்கள் மூலம் அமெரிக்காவுக்குச் சுமார் 55 பில்லியன் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.
ஏன் முக்கியம்
பெரும்பாலான சர்வதேச மாணவர்கள் முழு கல்விக் கட்டணத்தையும் செலுத்துகிறார்கள். அமெரிக்க அரசு அல்லது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் தரும் நிதி உதவிக்கு அவர்கள் தகுதி பெறுவதில்லை. அங்கு உள்நாட்டு மாணவர் சேர்க்கை குறைந்துவரும் நிலையில், செலவுகளைச் சமாளிக்கப் பல அமெரிக்கக் கல்வி நிறுவனங்களுக்கு இந்த நிதி தான் மிக முக்கிய ஆதாரமாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது டிரம்ப் நிர்வாகம் அதையே காலி செய்யும் வகையில் செயல்படுவதாகப் பலரும் விமர்சிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications