என்னது ரிசல்ட்டை நிறுத்திடுவீங்களா.. எங்க டீமும் ரெடியா இருக்கு.. டிரம்புக்கு எதிராக ஜோ பிடன் அதிரடி
வாஷிங்டன்: ஓட்டு எண்ணிக்கையை நிறுத்துவதற்கு டொனால்ட் ட்ரம்ப் தரப்பில் நீதிமன்றத்தை நாடினால், அதை எதிர்த்து வாதிடுவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக ஜோ பிடன் தரப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில், இதுவரை குடியரசு கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு தரப்புக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி சூழ்நிலை நிலவி வருகிறது.
சில மாகாணங்களில் ஆரம்பத்தில் ஜோ பிடன் முன்னிலை பெற்று இருந்தாலும், பிறகு டிரம்ப் முன்னிலை பெற்றார். இப்படியாக மாறி மாறி வரும் சூழ்நிலைக்கு நடுவே, செய்தியாளர்களை சந்தித்தார் டிரம்ப்.
அப்போது அவர் பேசுகையில், தேர்தலில் முறைகேடு நடப்பதாகவும், எனவேதான் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினார். தாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்று ஆணித்தரமாக தெரிவித்த அவர் அதற்கு மாறாக ஏதாவது நடந்தால் உச்ச நீதிமன்றத்தை நாடி வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி விடுவேன் என்று எச்சரித்தார்.
டொனால்ட் ட்ரம்ப் VS ஜோ பிடன்.. எந்த மாகாணங்கள் யார் வசம்? லிஸ்ட் இதோ
இந்த நிலையில்தான் ஜோ பிடன் பிரச்சார, மேலாளர் ஜென் ஓமல்லி தில்லன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் டொனால்டு டிரம்ப், தான் மிரட்டியபடியே நீதிமன்றத்துக்குச் சென்று, நியாயமான வாக்கு எண்ணிக்கை தடுப்பாரேயானால், எங்களது சட்ட குழுவும் அதை எதிர்கொள்வதற்கு தயாராகி இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நீதிமன்றத்தை நோக்கி நகர்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவரும் வரை யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம் என்று தனது ஆதரவாளர்களை ஜோ பிடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.