செவ்வாயின் செவ்வானத்தில் சிறகடித்து பறந்த இன்ஜெனியுட்டி ஹெலிகாப்டர் - மனித குலத்தின் புதிய மைல்கல்
வாஷிங்டன்: செவ்வாய் கோளில் இறங்கி ஆய்வு செய்யும் நாசாவின் பெர்சவரென்ஸ் ரோவர் கலத்தில் இருந்து இன்ஜெனியுட்டி ஹெலிகாப்டர் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. செவ்வாயின் காற்றுமண்டலத்தை ஆராயவுள்ள இந்த ஹெலிகாப்டர் -130 டிகிரி இரவுநேர குளிர்ச்சியை தாக்குப்பிடித்து செவ்வாயின் செவ்வானத்தில் வெற்றிகரமாக சிறகடித்து பறந்துள்ளது.
பூமிக்கு வெளியே வேற்று கிரகமான செவ்வாயில் ஹெலிகாப்டரை பறக்க வைத்து புதிய மைல்கல்லை தொட்டுள்ளது மனித குலம்.
மிகக் குறைந்த வெப்பநிலையில் அதன் நுண்மையான மின்னணு கருவிகள் பாதிக்காமல் இருக்க சிறப்பு ஹீட்டர் அமைக்கப்பட்டுள்ளதே காரணமாகும்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய பெர்செவரன்ஸ் எனும் விண்கலத்தை கடந்த ஆண்டு அனுப்பியது. இந்த விண்கலம், கடந்த பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக செவ்வாயை சென்றடைந்தது.
"ரிசல்ட்".. கியரை மாற்ற தயாராகிறதா அதிமுக.. இருவரில் "அவர்" யார்.. வட்டமடிக்கும் எதிர்பார்ப்புகள்!
2 கிலோ எடை கொண்ட இன்ஜெனியுட்டி
பெர்செவரன்ஸ் விண்கலத்தடன், இன்ஜெனியுட்டி என்ற டிரோன் ரக ஹெலிகாப்டரையும், அடிப்பகுதியில் இணைத்து அனுப்பியிருந்தது நாசா. சுமார் 2 கிலோ எடையில், அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தன்னிச்சையாக இயங்கும் வகையில் இன்ஜெனியுட்டி ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
பறக்க வைப்பதில் சவால்
இந்த இன்ஜெனியுட்டி ஹெலிகாப்டரை, பெர்செவரன்ஸ் விண்கலத்தில் இருந்து பிரித்து, செவ்வாயின் வெளிப்பரப்பில் பறக்க வைப்பதே நாசாவின் திட்டமாகும். இன்ஜெனியுட்டி ஹெலிகாப்டர் விண்கலத்தில் இருந்து பிரிந்த நிலையில், அதை பறக்க வைப்பதற்கான ஆயத்த வேலைகளில் நாசா களமிறங்கியபோது பல புதிய சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது.
கடுங்குளிர்
செவ்வாய் கிரகத்தில் இன்ஜெனியுட்டி தரை இறங்கிய இடத்தில் இரவு நேரம் என்பதால் மைனஸ் 90 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உறைநிலை நீடிக்கும். கடுங்குளிரால் ஹெலிகாப்டர் பாகங்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகளும் இருந்தன.மேலும் மெல்லிய வளிமண்டலத்தை செவ்வாய் கிரகம் கொண்டிருப்பதால், ஹெலிகாப்டரை பறக்க வைப்பது நாசா விஞ்ஞானிகளுக்கு கடும் சவாலாக இருந்தது.
சிறகடித்து பறந்த இன்ஜெனியுட்டி
எத்தனை சவால்கள் தடைகள் இருந்தாலும் அனைத்தையும் தகர்த்தெறிந்து விட்டு தன்னுடைய இறக்கைகளை சுழற்றி செவ்வாயின் செவ்வானத்தில் சிறகடித்து பறந்தது இன்ஜெனியுட்டி. இதன்மூலம் பூமியைத் தவிர வேற்று கிரகத்தில் பறந்த முதல் ஹெலிகாப்டர் என்ற சாதனை படைத்துள்ளது. இது மனித குலம் நிகழ்த்தியுள்ள மகத்தான சாதனையாகும்.
நாசா விஞ்ஞானிகள் சாதனை
செவ்வாய்கிரகத்தில் சுமார் 3 மீட்டர் உயரத்தில் 30 வினாடிகள் பறந்த இன்ஜெனியுட்டி தனது நிழலை தானே படமெடுத்து பூமிக்கு அனுப்பி உள்ளது. இன்ஜெனியுட்டி பறக்கும் காட்சிகள் பெர்செவரன்ஸ் ரோவர் மூலம் பூமியை வந்தடைந்து உள்ளன. இந்த நிகழ்வு நாசா விஞ்ஞானிகளுக்கு மற்றுமொரு மணிமகுடமாக மாறி உள்ளது. இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.