"ஆணுறை.!" டிவியில் இப்படி பண்ணலாமா.. அதுவும் நேரலையில்.! செய்தியாளரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் சூறாவளி குறித்த தகவல்களைச் சேகரிக்கச் சென்ற செய்தியாளரின் மைக் இப்போது இணையத்தில் தீயாகப் பரவிக் கொண்டு இருக்கிறது.
உலகெங்கும் புவிவெப்ப மயமாதல் உள்ளிட்ட பல காரணங்களால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் உலகின் பெரும்பாலான நாடுகள் மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளன.
திடீர் திடீரென கொட்டித்தீர்க்கம் மழை, வெளுத்து வாங்கும் வெயில் உள்ளிட்டவை பொதுமக்களைத் திணறடித்தது. இதில் இருந்து உலக வல்லரசு நாடுகள் கூட தப்பவில்லை.

அமெரிக்கா
அப்படித்தான் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை மிக மோசமான புயல் ஒன்று தாக்கி சின்னாபின்னமாக்கிவிட்டது. இயன் என்ற அந்த சூறாவளி அமெரிக்காவில் புளோரிடா உள்ளிட்ட மாகாணங்களைப் புரட்டிப்போட்டுவிட்டது. அங்கு ஏற்பட்ட மிகச் சக்திவாய்ந்த புயல்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர்.

புயல்
புயலின் உச்சபட்ச அழிவை அங்குள்ள பொதுமக்கள் கண்டனர். அதிக அழிவை ஏற்படுத்தும் கேட்டகிரி 4 சூறாவளியாக வகைப்படுத்தப்பட்ட இயன் பல நகரங்களை நாசம் செய்துவிட்டது. சில இடங்களில் சொகுசு கப்பல்களே நகருக்குள் வந்துவிட்டது. மேலும், சில இடங்களில் மிக பெரிய சுறாக்கள் கூட நகர்ப்பகுதிகளுக்கு அடித்து வரப்பட்டது.

பறந்த ரிப்போர்ட்டர்
இப்படி இந்த சூறாவளி நாட்டில் பல பகுதிகளையும் வெளுத்து வாங்கிவிட்டது. புயல் குறித்த தகவல்களைக் களத்தில் இருந்து உடனுக்கு உடன் தர அங்குள்ள செய்தியாளர்கள் புயல் நடந்த இடங்களுக்கே படையெடுத்து இருந்தனர். அப்படித்தான் சூறாவளிக்கு நடுவே நின்று ரிப்போர்ட் செய்ய முயன்ற செய்தியாளர் ஒருவர் கிட்டதட்ட காற்றில் பறந்துவிடும் சூழல் உருவானது. இந்தச் சூழலில் சூறாவளியில் மற்றொரு சுவாரசியம் அரங்கேறி உள்ளது.

மைக்
சூறாவளி குறித்த செய்திகளைக் களத்தில் இருந்து தர அந்நாட்டு ஊடகத்தில் பணிபுரியும் கைலா கேலர் என்பவர் களத்திற்குச் சென்று இருந்தார். புளோரிடாவில் இருந்து கைலா கேலர் சூறாவளி குறித்து தகவல்களை உடனுக்கு உடன் தந்து கொண்டு இருந்தார். அவர் கொடுத்த துல்லியமான தகவல்களைத் தாண்டி, அவரது கையில் இருந்த மைக் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டது.

ஆணுறை
ஏனென்றால், அவர் தனது மைக்கை ஆணுறையைக் கொண்டு கவர் செய்து இருந்தார். முதலில் இதை டிவியில் பார்த்த பலருக்கும் அது என்ன என்று உறுதியாகத் தெரியவில்லை. எதோ வித்தியமான ஒன்றை வைத்து அவர் மைக்கை கவர் செய்துள்ளார் என்பது மட்டும் அவர்களுக்குப் புரிந்தது. இணையத்திலும் அவர் வீடியோ வேகமாக டிரெண்டிங் ஆனது. இதையடுத்து அவரே தனது கையில் இருந்தது என்ன என்பது குறித்து தனியாக விளக்கம் அளித்து இருந்தார்.

விளக்கம்
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், "எனது மைக்கில் இருந்தது என்ன என்று பலரும் சமூக வலைத்தளங்களில் என்னிடம் கேட்கிறார்கள்.. நீங்கள் நினைப்பது சரி என்று மட்டும் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இது ஆணுறை தான்.. இங்கே கனமழை பொய்து கொண்டு இருக்கிறது. மைக்கில் நீர் புகுந்தால் என்னால் எதுவும் செய்ய முடியாது. இதன் காரணமாகவே நான் இப்படிச் செய்தேன். ஆம் இது ஒரு ஆணுறை தான்" என்று அவர் விளக்கம் அளித்து உள்ளார்.

நெட்டிசன்
இந்த விளக்க வீடியோ இணையத்தில் தீயாகப் பரவியது. இது தொடர்பாகப் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறேன். சிலர் அந்த ரிப்போர்ட்டர் செய்தது சரி என்று கூறி வருகின்றனர். அதேநேரம், இன்னும் சிலர், "டிவி சேனல் தங்கள் ரிப்போர்டர்களுக்கு மைக்கை கவர் செய்யக் கவர் கூட தர மாட்டார்களா.. அந்த பெண் கவனத்தை ஈர்க்கவே இப்படிச் செய்துள்ளார்" என்று கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications