கொரோனா பரவல் அதிகரிப்பு... இலங்கை, ஜப்பானுக்கு செல்ல வேண்டாம் - அமெரிக்கா அரசு அறிவுறுத்தல்
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இலங்கை, ஜப்பானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என அந்நாடு அறிவுறுத்தியுள்ளது.
வாஷிங்டன்: இலங்கை, ஜப்பான் நாடுகளில் கொரோனா அதிகமாக பரவி வருவதால் அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என அந்நாடு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தடையை மீறி செல்ல விரும்பினால் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என அமெரிக்க மக்களுக்கு அந்நாடு அறிவுறுத்தல் செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமானதால், பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்குப் பயணிகள் வருவதற்குத் தடை விதித்தன. அமெரிக்காவும் இந்தியாவில் இருந்து பயணிகள் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதித்தது. மேலும், தங்கள் நாட்டு குடிமக்கள் யாரும் இந்தியாவிற்குச் செல்ல வேண்டாமென்றும் இந்தியாவில் இருக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக இந்தியாவைவிட்டு வெளியேறும்படியும் அந்த நாடு கேட்டுக்கொண்டது.

தற்போது ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. ஜப்பானில் கடந்த 24 மணி நேரத்தில் 4, 045 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இலங்கையில் 2,971 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருநாடுகளிலும் தொற்று பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால், அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஜப்பானில் தற்போது நிலவும் சூழலில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கூட உருமாறிய கொரோனாவை பரப்ப வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க சில வாரங்களே உள்ள நிலையில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. ஏற்கனவே, கொரோனா பெருந்தொற்று காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒராண்டு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications