எவ்வளவு கம்பி கட்டுன கதை .. அடப்பாவிகளா.. கொரோனா குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் சொன்ன உண்மை
வாஷிங்டன் : கொரோனாவின் தோற்றத்தை ஒருபோதும் அடையாளம் காண முடியாது என்று அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கூறியுள்ளன. கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவியதா அல்லது ஆய்வகத்திலிருந்து கசிந்ததா என்பது பற்றிய விரிவான ஆய்வை நடத்தி அவர்கள் ஒரு மதிப்பாய்வை வெளியிட்டிருக்கிறார்கள்.
கடந்த இரண்டு வருடத்தில் பல லட்சம் பேரை கொன்றுவிட்ட கொரோனா வைரஸ் எப்படி முதலில் மனிதர்களை பாதித்தது என்பதற்கான தகவல்கள் உலகத்திடம் இல்லை. இயற்கையான தோற்றமா அல்லது ஆய்வக கசிவு காரணமா என்பது குறித்து ஒரு முடிவுக்கு வர இயலவில்லை என்று அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கூறியுள்ளன.
இயற்கையான தோற்றமாகவோ அல்லது ஆய்வக கசிவு காரணமாகவோ இருக்கலாம் என்றும் இரண்டுமே நம்பத்தகுந்த கருத்துக்களாக உள்ளதாகவும் அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனரின் அலுவலகம் (ODNI) அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேநேரம் மேற்கண்ட இரண்டில் எது அதிக சாத்தியம் அல்லது ஏதேனும் உறுதியான மதிப்பீடு செய்ய முடியுமா என்பதில் ஆய்வாளர்கள் உடன்படவில்லை என்றும் கூறியுள்ளது.

இல்லவே இல்லை
கொரோனா வைரஸ் ஒரு உயிரி ஆயுதமாக உருவானது என்ற பரிந்துரைகளையும் ODNI தனது அறிக்கையில் நிராகரித்தது. கொரோனா வைரஸ் பயோ ஆயுதமாக பயன்படுத்தப்பட்டிருக்கும் என்ற கூறிய குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது. இந்த விஷயத்தில் தவறான தகவல்களை பரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன சொல்கிறது
அமெரிக்க நேரப்படி வெள்ளியன்று (இன்று அதிகாலை) வெளியிடப்பட்ட புலனாய்வு அமைப்பின் அறிக்கை என்பது அதிபர் ஜோ பிடனின் நிர்வாகம் ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட 90 நாள் மதிப்பாய்வின் புதுப்பிப்பாகும். உலகளாவிய தொற்றுநோயின் விளைவுகளுக்கு சீனாவை எந்த அளவிற்கு குற்றம் சாட்டுவது என்பது குறித்த தீவிர அரசியல் மோதல்களுக்கு மத்தியில் இந்த அறிக்கைகள் வந்துள்ளது.

வைரஸின் மூலம்
அமெரிக்க புலனாய்வு அமைப்பின் இந்த அறிக்கையை விமர்சித்து சீனா பதிலளித்துள்ளது. வாஷிங்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லியு பெங்யு மின்னஞ்சல் அறிக்கையில் கூறும் போது, "COVID-19 இன் தோற்றத்தைக் கண்டறிய விஞ்ஞானிகளுக்குப் பதிலாக அதன் உளவுத்துறை கருவியை நம்பியிருக்கும் அமெரிக்க நகர்வுகள் ஒரு முழுமையான அரசியல் கேலிக்கூத்து.. இது அறிவியல் அடிப்படையிலான மூல ஆய்வை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயல். வைரஸின் மூலத்தைக் கண்டறியும் உலகளாவிய முயற்சியைத் தடுக்கும் செயல் " என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

படுதோல்வி
கொரோனா என்ற கொடிய தொற்றுநோய் அமெரிக்க பொருளாதாரத்தை அழித்ததால் அமெரிக்காவில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் , தேர்தலில் பெரும் தோல்வியை தழுவினார். அவர் தோற்றுப்போக கொரோனா முக்கியமான காரணமாக அமைந்தது. அவரது ஆதரவாளர்கள் பலர் COVID-19 ஐ "சீனா வைரஸ்" என்றே குறிப்பிட்டனர். சீனா மீது டிரம்ப் கடும் கோபத்தையும் வெளிப்படுத்தினார்.

வாய்ப்பு
இந்நிலையில் ஆய்வை மேற்கொண்ட சில அமெரிக்க உளவு அமைப்புகள் வைரஸ் இயற்கையில் உருவானது என்ற விளக்கத்தை ஆதரிக்கின்றன அண்மை காலங்களில் வைரஸ் காட்டு விலங்குகளிடையே பரவலாகவும் இயற்கையாகவும் பரவுவதை உதாரணமாக சொல்கின்றன. எனினும் விலங்கில் இருந்து கொரோனா பரவி இருக்கலாம் என்பதை அமெரிக்க உளவு அமைப்புகள் ஓரளவு நம்புகின்றன.

வுஹான் இன்ஸ்டிடியூட்
அதேபோல் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி மூலம் பரிசோதனையின் போது அல்லது அவர்கள் விலங்குகளைக் கையாளுதலின் போது ஆய்வக விபத்தின் விளைவாக, முதல் மனித கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று "மிதமான நம்பிக்கை" இருப்பதாகவும் சில அமெரிக்க உளவு அமைப்புகள் நம்புகின்றன. இறுதியாக உளவு அமைப்புகள் சொல்லவருவது என்ன தெரியுமா? கோவிட்-19 இன் தோற்றம் பற்றிய உறுதியான விளக்கத்தை தங்களால் வழங்க முடியாது என்பதுதான்.. கொரோனா குறித்து எவ்வளவு கட்டுக்கதைகள் பல பரவின. பல நாடுகளில் ஆட்சியில் உள்ளவர்களே அப்பட்டமாக வதந்திகளை பரப்பினார்கள். காலம் தான் அவர்கள் சொன்னது எல்லாம் வதந்தி, பொய் என்பதை நிரூபித்து வருகிறது. ஒரு நாள் உண்மை தெரியாமலா போய்விடும்,.












Click it and Unblock the Notifications