'இந்த நாள் அமெரிக்காவிற்கு சிறந்த நாள்'.. முககவசத்தை மகிழ்ச்சியுடன் கழற்றி போட்ட அதிபர் பைடன்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்களுக்கு உள் மற்றும் வெளி இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் தேவையில்லை என அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அங்கு கொரோனா தொற்றால் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டதன் காரணமாக அங்கு கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை வேகமாக திரும்பி வருகிறது.
இதையடுத்து தொற்றுநோய்க்கு முந்தைய வாழ்க்கைக்கு திரும்புவதற்கான ஒரு முக்கிய படியாக, அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், நேற்று (வியாழக்கிழமை) முழு தவணை தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு முககவசம் அணிவதில் இருந்து விலக்கு அளித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

முககவசத்தை அகற்றினார்
இதன்படி, வெளி இடங்கள் மற்றும் பெரும்பாலான உட்புற கட்டிடங்களில் முககவசம் அணிய வேண்டியதில்லை என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, 'இன்றைய நாள் அமெரிக்காவிற்கு சிறப்பான நாள் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகிழ்ச்சி அடைந்தார். அத்துடன் இந்த கட்டுப்பாடு தளர்வுகள் அறிவிக்கப்பட்டப்பின் அதிபர் ஜோ பைடன் தனது அலுவலகத்தில் முகக்கவசத்தை அகற்றினார்.

தடுப்பூசி போட்டவர்கள்
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இந்த புதிய அறிவிப்புபடி இரண்டு டோஸ்களையும் செலுத்தி கொண்ட மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க தேவையில்லை. அமெரிக்காவின் 35 சதவீத மக்கள் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் இந்த புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த புதிய கட்டுப்பாடுகள் மருத்துவமனைகள் மற்றும் சிறைகளுக்கு பொருந்தாது. அதேபோன்று நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்ய மாட்டோம்
இந்த புதிய தளர்வுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு சென்ற அதிபர் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் பிற ஊழியர்கள் முகக்கவசம் இல்லாமல் சென்றார்கள. அப்போது பேசிய பைடன், "நாங்கள் வெளியே சென்று யாரையும் கைது செய்யப்போவதில்லை. அதேநேரம் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்களை முகக்கவசம் அணிய வேண்டும் என்றார்..

விதிகள் எப்படி
ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில்,"விதிகள் மிக எளிமையானது. தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் அல்லது தடுப்பூசி செலுத்தும் வரை முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள்," என்று கூறியுள்ளார். எனினும் தற்போதைய நிலையில் கூட்டமாக இருக்கும் பேருந்துகள், விமானங்கள் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று புதிய வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயல்பு நிலை திரும்புகிறது
அமெரிக்காவில் பைசர் தடுப்பு மருந்தை 12-15 வயதிலான குழந்தைகளுக்கு செலுத்தலாம் என்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலைக்குள் 70 சதவீதம் மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட வேண்டும் என்று அதிபர் பைடன் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார். அரசின் அறிவிப்பு மற்றும் வழிகாட்டுதல்களில் தளர்வு காரணமாக அமெரிக்காவின் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அனேகமாக இன்னும் ஒரிரு மாதங்களில் அமெரிக்கா கொரோனாவிற்கு முந்தைய வாழ்க்கைக்கு திரும்பி விடும் என்று நம்பிக்கை பிறந்துள்ளது.












Click it and Unblock the Notifications