'அநேகமாக அடுத்த வார இறுதியில்' ட்விட் பதிவில் ட்விஸ்ட் வைத்த எலான் மஸ்க்..எதை சொல்கிறார் தெரியுமா?
வாஷிங்டன்: போலி அக்கவுண்டுகள் தாறுமாறாக உயர்ந்ததால் 8 டாலர் செலுத்தி புளு டிக் வசதியை பெறும் வசதியை ட்விட்டர் நிறுவனம் தற்காலிமாக நிறுத்தி வைத்தது. இந்த நிலையில், மீண்டும் ட்விட்டர் புளு சப்கிரிப்ஷன் எப்போது கொண்டு வரப்படும் என நெட்டிசன் எழுப்பிய கேள்விக்கு எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்
உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் அண்மையில் முன்னணி சமூக ஊடக வலைத்தளமான ட்விட்டரை வாங்கினார்.
44 பில்லியன் டாலர் மதிப்பில் ட்விட்டரை வாங்கிய கையோடு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எலான் மஸ்க் எடுத்து வருகிறார்.

எலான் மஸ்க்கின் அதிரடி
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க செலவீனங்களை குறைக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும்.. இல்லாவிடில் ட்விட்டர் திவால் நிலையை சந்திக்கும் என்றும் ட்விட்டர் ஊழியர்களுக்கு அனுப்பிய இமெயிலில் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்து இருந்தார். வருவாய் பெருக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக ட்விட்டர் புளு சப்ஸ்கிரிப்ஷன் செய்தால் மட்டுமே புளு டிக் வசதியை பெற முடியும் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்து இருந்தது.

புளு டிக் பெறும் வசதி
அதன்படி மாதத்திற்கு 8 டாலர் கட்டணம் செலுத்தி புளு டிக் பெறும் வசதி பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இது அறிமுகப்படுத்தியதில் இருந்தே பிரபல நிறுவனங்கள், பிரபலமானவர்களின் போலி கணக்குகள் உருவாக்கி புளூ டிக் வசதியும் பலரும் பெற்று மோசடியாக அறிவிப்பை வெளியிட ஆரம்பித்துவிட்டனர். இயேசு கிறிஸ்து பெயரில் கூட அக்கவுண்ட் உருவாக்கி அதற்கும் புளு டிக் வசதி வாங்கி விட்டிருந்ததையும் காண முடிந்தது.

போலி கணக்குகள்
காளான்கள் போல போலி கணக்குகள் புளு டிக் வசதியுடன் அதிகரித்ததால் , வேறு வழியின்றி ட்விட்டர் புளு சப்கிரிஷ்னை ட்விட்டர் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. ஏற்கனவே கடும் நிதிச்சுமையில் இருப்பதாக கூறிய எலான் மஸ்க், 50 சதவீத ஊழியர்கள் பணி நீக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருந்தார். இதனால், ட்விட்டர் புளூ வசதி மீண்டும் அறிவிக்கப்படலாம் என்றே பல்வேறு தரப்பினரும் கூறிவந்தனர்.

அடுத்த வார இறுதியில்..
இந்த நிலையில் ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர், எலான் மஸ்கிடம் ட்விட்டர் புளு மீண்டும் எப்போது கொண்டு வரப்படும் என்று கேட்டு இருந்தார். இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், ''அநேகமாக அடுத்த வார இறுதியில்'' என்று பதிலளித்துள்ளார். இதனால் ட்விட்டர் புளு சப்கிரிப்ஷன் திட்டத்தில் இருந்து பின் வாங்கப்போவது இல்லை என்று எலான் மஸ்க் சூசகமாக தெரிவித்துள்ளதாகவே கூறப்படுகிறது.

ஒரிஜினல் அக்கவுண்ட் என்பதை
இதற்கு முன்பாக புளு டிக் வசதி அரசியல் தலைவர்கள், அரசு நிறுவனங்கள், பிரபலமான தொழில் அதிபர்கள், திரை , விளையாட்டு பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால், எலான் மஸ்க் அறிவித்த சப்ஸ்கிரிப்ஷன் வசதி மூலம் கட்டணம் செலுத்தி யார் வேண்டும் என்றாலும் ஒரிஜினல் அக்கவுண்ட் என்பதை உறுதிப்படுத்தும் புளு டிக் வசதியை பெறும் நிலை ஏற்பட்டது.

புது தலைவலி
வருவாயை அதிகரிக்கும் நோக்கில் எலான் மஸ்க் இதை அறிவித்தாலும் போலி அக்கவுண்டுகள் எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்ததால் ட்விட்டர் நிறுவனத்திற்கு புது தலைவலி ஏற்படுத்தியது. இதனால், தற்காலிமகாக நிறுத்திவைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications