'எம்மோ! என்னது இது கருப்பா'.. விமானத்தில் வழங்கப்பட்ட மீல்ஸில் பாம்பு தலை.. தலைசுற்றிப்போன பயணிகள்!
வாஷிங்டன்: துருக்கி தலைநகர் அன்காராவில் இருந்து ஜெர்மனியின் டஸ்சல்டோர்ப் நகருக்கு சென்ற விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு தலை கிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
உணவு பொருட்களில் கலப்படத்தை தாண்டி தற்போது சைவ உணவில் சிக்கன் துண்டுகள் கிடப்பது மற்றும் பேண்டேஜ்கள் கிடப்பது என அடிக்கடி புகார்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
அண்மையில் கூட ஒரு ஓட்டலில் பீட்ரூட் பொறியலில் எலியின் தலை கிடந்தது உணவு விரும்பிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
துருக்கியில்..
ஹோட்டலில் வழங்கப்படும் உணவுகளில் தான் இப்படி ஒரு பிரச்சினை தப்பித்தவறி நடந்து விடுகிறது என்றால் விமானங்களில் வழங்கப்படும் உணவும் இதற்கு விதி விலக்கு இல்லை போல தெரிகிறது. விமானங்களில் தரமான உணவு வழங்கப்படுவதாகவே நம்பப்பட்டாலும் சில சமயங்களில் முகம் சுழிக்கும் வகையிலான உணவுகளும் வழங்கப்படுவதாக அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பயணம் செய்தவர்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டுவதை காண முடியும். அப்படியான ஒரு சம்பவம்தான் துருக்கியில் நடைபெற்றுள்ளது.
ஜெர்மனி சென்ற விமானத்தில்
துருக்கி தலைநகர் அன்காராவில் இருந்து ஜெர்மனியின் டஸ்சல்டோர்ப் நகருக்கு சென்ற விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு தலை கிடந்துள்ளது. இது தொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சன் எக்ஸ்பிரஸ் என்ற விமான நிறுவனத்தில்தான் அந்த அலட்சியமான சம்பவம் நடந்துள்ளது. அழகான டிரேயில் கொடுக்கப்பட்ட உணவில் பாம்பின் தலை இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. அப்படி இருந்தும் இந்த தவறு எப்படி நடைபெற்றது என்று நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
உணவில் பாம்பின் தலை
இது குறித்து விளக்கம் அளித்துள்ள சன் எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், ''எங்கள் விமானத்தில் பயணிக்கும் விருந்தினர்கள் மற்றும் விமான ஊழியர்களுக்கு எப்போதும் சவுகரியமான பயண அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்குதான் நாங்கள் அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறோம். விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்பின் தலை கிடந்ததாக குற்றச்சாட்டுக்கள் வந்துள்ளன. இந்த விவகாரம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
விசாரணை முடியும் வரை
உரிய விசாரணைக்கு நடத்த உத்தரவிட்டு இருக்கிறோம். விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட நிறுவனம் உணவு விநியோகம் செய்வதையும் நிறுத்தி வைத்துள்ளோம்' எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமான நிறுவனமாக உள்ள சன் எக்ஸ்பிரஸ் ஏர்லைன் நிறுவனத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்தது விமான பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.