ஸ்பீட் & ஸ்லோ! மாறி மாறி சுழலும் பூமி! அப்போதெல்லாம் ஒரு நாள் 19 மணி நேரம்தானாம்! வியந்த ஆய்வாளர்கள்
வாஷிங்டன்: பூமியின் சுழற்சி வேகம் கடந்த சில காலமாக மெதுவாகி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
நமது பூமி எப்படி சூரியனைச் சுற்றி வருகிறதோ, அதேபோல தன்னை தானே சுற்றிக் கொள்கிறது. இது தான் நமது பூமியில் இரவையும் பகலையும் தீர்மானிக்கிறது.
இப்படி பூமி தன்னை தானே சுற்ற 24 மணி நேரம் ஆகும் என்ற நிலையில், தற்போது இதில் சற்று மாற்றங்கள் ஏற்படுவதாகச் சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
என்ன நடக்குது? வேகமாக சுழல தொடங்கும் பூமி! 24 மணி நேரத்தைவிட குறையும் ஒரு நாள்! ஆய்வாளர்கள் குழப்பம்
பூமியின் வேகம்
மிகத் துல்லியமாக இயங்கும் கடிகாரங்கள் உள்ளிட்ட நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்ததில் பூமியில் ஒரு நாளின் நீளம் திடீரென நீண்டு கொண்டே செல்வது தெரிய வந்துள்ளது. முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இந்த உலகில் இது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். ஜிபிஎஸ் தொடங்கி பல்வேறு தொழில்நுட்பங்களிலும் இந்த நேர மாற்றம் என்பது சிக்கலை ஏற்படுத்தலாம்.
குறை தொடங்கி உள்ளது
பூமியின் சுழற்சி வேகத்தை நிர்ணயம் செய்யும் பூமி அச்சின் சுழற்சி சில ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது. கடந்த ஜூன் மாதம் மனித வரலாற்றில் மிகக் குறுகிய நாள் பதிவாகி இருந்தது. இது ஒருபுறம் இருந்தாலும் கூட கடந்த 2020 முதல் சுழற்சியின் வேகம் மெல்லக் குறையத் தொடங்கி உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். இருப்பினும், இதற்கான காரணம் மர்மமாகவே உள்ளது.
அரிது
நம்மைச் சுற்றி உள்ள கடிகாரங்கள் ஒரு நாள் என்பது 24 மணி நேரமாகத் தான் காட்டும். ஆனால் உண்மையில் பூமியின் சுழற்சி என்பது சில மில்லி நொடிகள் வரை மாறும். நிலநடுக்கம், புயல் தொடங்கி இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதனால் பூமியின் சுழற்சி மிகச் சரியாக 24 மணி நேரமாக இருப்பது ரொம்பவே அரிது!
19 மணி நேரம்
பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வரும் இந்த பூமியில், நிலாவால் ஏற்படும் அலைகளுடன் தொடர்புடைய உராய்வு நிகழ்வுகளால் பூமியின் சுழற்சி குறைந்து வருகிறது. அதாவது ஒவ்வொரு நூற்றாண்டிலும் பூமியின் சுழற்சி சுமார் 2.3 மில்லி விநாடிகள் தாமதம் ஆகிறது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் ஒரு நாள் என்பது 19 மணிநேரமாக மட்டுமே இருந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காரணங்கள்
பூமியில் ஏற்படும் இயற்கை பேரழிவுகள் கூட பூமியின் சுழற்சியைப் பாதிக்கும். கடந்த 2011ஆம் ஆண்டு ஜப்பானில் 8.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பூமியின் சுழற்சி வேகத்தை மாற்றி உள்ளது. அதேபோல பருவநிலை மாற்றத்தால், பனிப்பாறைகள் உருகுவது தொடங்கி அனைத்துமே பூமியின் சுழற்சி வேகத்தைப் பாதிப்பதாகவே உள்ளது. ஒரு புறம் பூமியின் வேகம் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கூறி வந்தாலும், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் மற்றொரு மாற்றத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
மீண்டும் குறைவு
அதாவது தொடக்கத்தில் பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து வந்த நிலையில், இடையில் சில நூற்றாண்டுகள் மட்டும் வேகம் குறைந்துள்ளது. இப்போது மீண்டும் சில காலமாகப் பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ளது. இதனால் ஒரு நாள் என்பது 24 மணி நேரத்தில் இருந்து அதிகரிக்கும் சுழல் உருவாகி உள்ளது. அதேநேரம் இவை பொதுவாக மில்லிநொடிகளில் தான் இருக்கும்.
காரணம்
இதற்கான காரணம் ஆய்வாளர்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. முன்பு கூறியதை போலப் பருவநிலை மாற்றம் அல்லது பனிப்பாறை உருகுவது இதற்கான காரணமாக இருக்கலாம். அல்லது "சாண்ட்லர் தள்ளாட்டம்" எனப்படும் பூமியின் சுழற்சி அச்சில் ஏற்படும் சிறிய விலகலும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இருப்பினும், சுழற்சி தொடர்ச்சியாகக் குறைந்தால் நெகடிவ் லீப் நொடிகள் நமது சிஸ்டத்தில் சேர்க்கப்படும்.