அமெரிக்காவில் உருமாறிய கொரோனா உறுதி... சமூக பரவலாக மாறியிருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் அச்சம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் முதல்முறையாக கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வேகமாகப் பரவும் உருமாறிய கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகளில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் குறைந்திருந்தது. இருப்பினும், கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
பிரிட்டன் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் புதிய வகை கொரோனா வைரசை கண்டுபிடித்தனர். இந்த உருமாறிய கொரோனா மற்ற வகைகளைவிட 70% வேகமாகப் பரவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் ரீவைண்ட் 2020: காதல் மன்னன் காசி கைது முதல் வேல் யாத்திரை வரை மறக்கமுடியுமா
அதிக ஆபத்தானது இல்லை
இந்த உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு ஒரு வைரஸ் தன்னை மாற்றிக்கொள்வது இயற்கையானது தான் என்றும் இந்த வகை கொரோனா வேகமாகப் பரவுகிறதே தவிர அதிக ஆபத்தானது இல்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் புதிய வகை கொரோனா
இந்நிலையில், அமெரிக்காவில் தற்போது இந்த உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த உருமாறிய கொரோனா இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த நபர் எந்த வெளிநாட்டிற்கும் சமீபத்தில் பயணிக்கவில்லை. அதாவது வெளிநாடுகளுக்குச் சென்று வந்த மற்றவர்கள் மூலம் இவருக்கு புதிய வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நபருக்கு ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த கூடுதல் தகவல்களை அந்நாட்டு அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிக அரிது
அமெரிக்காவில் இந்த உருமாறிய கொரோனா பாதிப்பு மிக அரிதாகவே உள்ளது. இருப்பினும், மறுபுறம் அந்நாட்டில் உருமாறிய கொரோனா குறித்த சோதனைகள் மிக மிகக் குறைவாக நடைபெறுவதாகக் குற்றச்சாட்டுகளும் உள்ளன.
தடுப்பு மருந்து vs கொரோனா பரவல்
சியாட்டிலில் உள்ள பிரெட் ஹட்சின்சன் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் கொரோனா பரவல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர் ட்ரெவர் பெட்ஃபோர்ட் கூறுகையில், "வரும் வசந்த காலத்தில் கொரோனா பரவலின் மற்றொரு அலை ஏற்படக்கூடும் என்று அஞ்சுகிறோம். கொரோனா பரவலுக்கும் தடுப்பு மருந்து அளிக்கும் பணிகளுக்கும் இடையே தற்போது ரேஸ் நிலவுகிறது. இதில் கொரோனா பரவல் தற்போது சற்று வேகமெடுத்துள்ளது" என்றார்.
பொதுமக்கள் அச்சம்
கொலராடோ மாகாணத்தில் உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அங்கு மேலும் ஒரு நபருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் இருக்கலாம் என்று சுகாதாரத் துறையினர் சந்தேகிக்கின்றனர். இது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தடை இல்லை, கட்டுப்பாடு உண்டு
உருமாறிய கொரோனா பரவலைத் தொடர்ந்து, பிரிட்டன் உடனான விமானப் போக்குவரத்திற்கு இந்தியா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகள் தடை விதித்தன. இருப்பினும், அமெரிக்க அரசு இதுவரை தடை எதையும் விதிக்கவில்லை. மாறாகப் பிரிட்டனிலிருந்து வருபவர்கள் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை நாட்டிற்குள் நுழைந்து 72 மணி நேரத்தில் நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.