அமெரிக்க அதிபர் டிரம்ப் நண்பர் சார்லி கிர்க்கை சுட்டுக்கொன்ற நபர் கைது.. சிக்கியது எப்படி?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் நெருங்கிய நண்பர் சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரைச் சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்றவர் டைலர் ராபின்சன் என்ற 22 வயது இளைஞர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் நெருங்கிய நண்பரும், வலதுசாரி ஆதரவாளருமான சார்லி கிர்க், பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 31 வயதான சார்லி கிர்க், 'டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ' என்ற இளைஞர் அமைப்பின் இணை நிறுவனராகவும் தலைமை நிர்வாக அதிகாரியுமாகவும் இருந்தார். இவர் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். குறிப்பாக, கடந்த தேர்தலின் போது, டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்காக வாக்காளர்களை திரட்டியதில் முக்கிய பங்கு வகித்தார்.

சார்லி கிர்க், நேற்று முன்தினம் உட்டா மாகாணத்தில் உள்ள வேலி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார். நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கிர்க்கை சுட்டதில், அவருடைய கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சார்லி கிர்க்கை அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சார்லி கிரிக்கிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய நண்பரான சார்லி கிர்க் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிர்க்கின் மரணத்திற்கு டிரம்ப் சோகத்துடன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். சார்லி கிர்க்கின் கொலை சம்வபத்தைக் குறிப்பிட்டு அமெரிக்காவின் இருண்ட காலம் என விமர்சித்த டிரம்ப், அந்நாட்டின் உயரிய 'மெடல் ஆஃப் ஃபிரீடம்' விருதை சார்லிக்கு வழங்குவதாக அறிவித்தார்.
உட்டா மாகாணத்தில் இருந்து அரிஸோனா மாகாணத்துக்கு சார்லி கிர்க்கின் உடலை துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் விமானம் மூலம் வியாழக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, அமெரிக்க கொடி போர்த்தப்பட்ட சார்லி கிர்க்கின் உடலை பாதுகாப்புப் படை வீரர்களுடன் ஜே.டி. வான்ஸும் சுமந்து சென்றார். சார்லி கிர்க் ஜே.டி. வான்ஸின் நீண்ட கால நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்லி கிர்க்கைக் கொன்ற சந்தேக நபர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று தெரிவித்துள்ளார். கொலையாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
சார்லி கிர்க்கை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவரை அவரது தந்தை போலீசில் ஒப்படைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. CNN செய்தியின்படி, சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்றதாக டைலர் ராபின்சன் என்ற 22 வயது இளைஞர் தனது தந்தையிடம் ஒப்புக்கொண்டார். பின்னர் அவரது தந்தை அதிகாரிகளுக்கு தகவல் அளித்து, போலீசிடம் ஒப்படைத்ததாக தெரிகிறது.
அமெரிக்காவையே உலுக்கிய சமீபத்திய அரசியல் வன்முறைச் செயலான சார்லி கிர்க் கொலைக்கான சந்தேக நபரின் பெயரையோ அல்லது காரணத்தையோ அதிகாரிகள் இன்னும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications