ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை தொடர்ந்து... இதிலும் ரத்த உறைதல் பிரச்னை.. அமெரிக்காவில் தற்காலிக தடை
வாஷிங்டன்: தடுப்பூசி எடுத்துக்கொண்ட சிலருக்கு ரத்த உறைதல் பிரச்னை ஏற்பட்டதால் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் கொரோனா பரவலின் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி பணிகள் மிக வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் அதிபர் பைடன் பதவியேற்றது முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பைசர், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Array
அதில் சிங்கிள் டோஸ் தடுப்பூசியான ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்களில் சிலருக்கு மோசமான மற்றும் அபூர்வமான ரத்த உறைதல் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியைப் பயன்படுத்துவதைத் தற்காலிகமாகத் தடை செய்ய அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. இதுவரை ஆறு பேருக்கு ரத்த உறைதல் பிரச்னை கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தடை
ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியைப் பயன்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்த அமெரிக்க அரசுக்குப் பரிந்துரை செய்வதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பு அறிவித்துள்ளது. இதுவரை 68 லட்சம் பேருக்கு ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 6 பேருக்கு மட்டும் மோசமான மற்றும் அபூர்வமான ரத்த உறைதல் பிரச்சனை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ரத்த உறைதல்
மேலும், இது குறித்த அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ரத்த உறைதல் பிரச்னை தற்போது வெகு சிலருக்கே ஏற்பட்டிருந்தாலும் இது முக்கியமானது என்பதால் இது குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். ரத்த உறைதல் பிரச்சனை ஏற்படும் நபர்களுக்குச் சிகிச்சை அளிக்க நாம் தயாராக இருக்க வேண்டியது அவசியம். மேலும், இது குறித்த விழிப்புணர்வை நாம் மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது தடுப்பூசி
ஏற்கனவே, ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய தடுப்பூசியிலும் இதே பிரச்னை கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள் ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களின் தடுப்பூசிக்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது இரண்டாவதாக ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏன் முக்கியம்
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், பைசர், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட வேண்டும். ஆனால், ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை ஒரு டோஸ் மட்டுமே செலுத்தினால் போதும். இதனால் அதிக நபர்களுக்குத் தடுப்பூசியைச் செலுத்த முடியும். மேலும், ஊசி, சிரஞ்ச் போன்ற மருந்து கழிவுகளும் குறையும்.