தடுப்பூசி மட்டுமே உங்கள் உயிரைக் காக்கும்.. மக்கள் முன்னிலையில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட கமலா ஹாரிஸ்
வாஷிங்டன்: தற்போதுள்ள சூழ்நிலையில், தடுப்பூசி மட்டுமே பொதுமக்களின் உயிரைக் காக்கும் என்று தடுப்பூசி எடுத்துக்கொண்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரிட்டன், தென்னாப்பிரிக்கா பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வகைகளும், கொரோனா பரவலைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், தடுப்பூசி மட்டுமே கொரோனா பரவைத் தடுத்த நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஃபைசர், மார்டனா, ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிகளுக்கு பல்வேறு நாடுகளும் அனுமதி அளித்துள்ளன.
கொரோனா தடுப்பூசி
உலகில் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அந்நாட்டில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஃபைசர் மற்றும் மார்டனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும், அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
தடுப்பூசி எடுத்துக்கொண்ட கமலா
மக்களின் அச்சத்தைப் போக்க அந்நாட்டின் முக்கிய தலைவர்கள் அனைவரும் பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசியை எடுத்துக்கொள்கின்றனர். அதன்படி ஏற்கனவே, அதிபர் பைடன் தனது கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் மக்கள் முன்னிலையில் எடுத்துக்கொண்டார். இந்நிலையில், அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிசும் தனது கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை நேற்று மக்கள் முன்னிலையில் எடுத்துக்கொண்டார்.
தடுப்பூசியே காக்கும்
தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்கர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதுவே அவர்களின் உயிரைக் காக்கும் என்றும் கூறினார். கமலா ஹாரிஸ் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார். தற்போது 30 நாள் இடைவெளியில் இரண்டாவது டோஸை எடுத்துக்கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள்
அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மெல்ல தொடங்கப்பட்டாலும், தற்போது பைடன் அரசு பதவியேற்ற பிறகு தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளன. தான் பதவியேற்ற பிறகு, முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்குவதே இலக்கு என்று பைடன் முன்னர் குறிப்பிட்டிருந்தார். அதன்படி கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பு
கொரோனா காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், அங்குப் புதிதாகப் பேருக்கு 1.48 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு கொரோனா பாதிப்பு 2.60 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல நேற்று மட்டும் கொரோனாவால் 4,045 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா உயிரிழப்பு 4.35 லட்சத்தைத் தாண்டியுள்ளது.