மீண்டும் சோவியத் ஒன்றியம்? அதிபர் புதின் போடும் மெகா பிளான்.. அடுத்து என்ன நடக்கும்? பரபர தகவல்
வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் புதினின் கனவு உக்ரைனைத் தாண்டி இருப்பதால், ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை உக்ரைன் உடன் முடியும் என உறுதியாகச் சொல்ல முடியாது என உலக நாடுகள் எச்சரித்துள்ளனர்.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளும் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகிறது. சீனா, சிரியா போன்ற சில நாடுகள் மட்டுமே ரஷ்யாவின் நடவடிக்கைக்கு ஆதரவாக உள்ளன.
ரஷ்யா உடன் ஒப்பிடுகையில் உக்ரைன் சிறிய நாடு என்பதாலும், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இல்லை என்பதாலும், இந்த போர் விரைவில் முடியலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், புதின் உக்ரைன் உடன் நிறுத்திக் கொள்வாரா எனத் தெரியவில்லை என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
அடேங்கப்பா! ரஷ்ய அதிபர் புதினின் சொத்துகளை முடக்க உத்தரவு. ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி.. ஏன் முக்கியம்
பனிப்போர்
ரஷ்யா அதிபர் புதினின் சமீபத்திய பேச்சுகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்கள் ஒன்றைக் கவனித்து இருக்கலாம். ரஷ்யாவின் சில கடந்தகால செல்வாக்கு மற்றும் ஆதிக்கத்தை வென்றெடுக்க வேண்டும் என்றே அவர் தொடர்ந்து கூறி வரும் நிலையில், உக்ரைன் அந்த லட்சியத்திற்கான தொடக்கமாக இருக்கலாம். பனிப்போரின் முடிவுக்கு வந்த விதமும் சோவியத் யூனியன் வீழ்ந்த விதமும் அப்போது உளவாளியாக இருந்த புதினுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
ராணுவ நடவடிக்கை
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை மூலம் ரஷ்யாவிற்கும் நேட்டோ அமைப்புக்கும் இடையே உறவில் தனக்கு அட்வான்டேஜ் இருப்பதாக புதின் நினைக்கிறார். இதன் மூலம் அகண்ட ரஷ்யா என்ற கனவை தன்னால் அடைய முடியும் என நம்புகிறார். பனிப்போருக்குப் பின்னர், பல முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் நோட்டோ படையில் இணைந்துள்ளன. இப்போது உக்ரைன் மீது படையெடுத்துள்ள புதின், பனிப்போருக்குப் பிந்தைய பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுவரையறை செய்ய முயலலாம் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
அனைத்தையும் செய்வார்
இதன் மூலம் வரலாற்றில் மாபெரும் சக்தியாக புதின் இடம் பெற முயல்வதாகவும் உக்ரைனைத் தாண்டி செல்ல தன்னால் முடிந்த அனைத்தையும் அவர் செய்வார் என்றும் லண்டன் பல்கலைக்கழக மூத்த ஆராய்ச்சியாளர் விளாடிமிர் பாஸ்துஹோவ் எச்சரித்துள்ளார். புதின் மீண்டும் ஒரு சோவியத் ஒன்றியத்தையே உருவாக்க முயல்வது தெளிவாகத் தெரிகிறது. இதனால், முன்னாள் சோவியத் நாடுகளான போலந்து, ருமேனியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள் கடும் அச்சத்தில் உள்ளன.
அடுத்து இலக்கு
மேலும், கடந்த 2004ஆம் ஆண்டு நேட்டோ அமைப்பில் இணைந்த முன்னாள் சோவியத் நாடுகளான எஸ்டோனியா, லாட்வியா மற்றும் லிதுவேனியா நாடுகளும் ரஷ்யாவின் இலக்காக தாங்கள் இருக்கக்கூடும் என்று அஞ்சுகின்றனர். இந்த நாடுகள் ஏற்கனவே நேட்டோ அமைப்பில் இருந்தாலும் கூட மேற்குல நாடுகள் இந்த நாடுகள் மீது பெரியளவில் அக்கறை காட்டவில்லை என யூரேசியா திட்டத்தின் தலைவரான ஜேம்ஸ் நிக்சி தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2008இல் ரஷ்யா மற்றொரு முன்னாள் சோவியத் நாடான ஜோர்ஜியாவை ஆக்கிரமித்தபோது, இனப்படுகொலையில் இருந்து ஒசைட்டியர்களைக் காப்பாற்றவே இந்த நடவடிக்கை எடுப்பதாகச் சப்பை கட்டுக் கட்டியது ரஷ்யா!
புதின் எண்ணம்
அதன் பின்னர், 2014இல் உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்த நடவடிக்கைகளால் டிரான்ஸ் காகசஸ் பிராந்தியத்தில் ரஷ்ய ராணுவத்தின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. ரஷ்யா ஒரு பேரரசு என்றே அதிபர் புதின் நம்புகிறார். எனவே, உக்ரைன், பெலாரஸ் ஆகியவை தனி நாடுகள் இல்லை என்றும் அவை ரஷ்யாவுடன் இணைக்கப்பட வேண்டும் என்றே புதின் திட்டவட்டமாகக் கருதுகிறார். கடந்த காலங்களில் கூட ரஷ்யாவிற்குத் திரும்பும் ஒரே நாடாக உக்ரைன் இருக்காது என்று பல முன்னாள் சோவியத் ராணுவ தளபதிகள் கூறி இருந்தன. போலந்து, பல்கேரியா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகள் அடுத்த குறியாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
திட்டம் என்ன
இப்போது உக்ரைனைக் கைப்பற்ற எந்த நடவடிக்கைகளைப் பயன்படுத்தியதோ, அதையே தான் அப்போதும் ரஷ்யா பயன்படுத்தும். அதாவது முதலில் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களை அந்தந்த நாடுகளுக்கு அனுப்பும். கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளைத் தனி குடியரசாக ரஷ்யா அங்கீகரிக்கும். அதன் பின்னர், அங்கு ரஷ்யா தனது ராணுவத்தை அனுப்பும். கடைசியாக ரஷ்யா எல்லை விரிவு படுத்தப்பட்டதாக அறிவிக்கப்படும். உக்ரைனில் பின்பற்றிய இதே முறையா தான் ரஷ்யா இதர நாடுகளுக்கும் பின்பற்றும்.
நேட்டோ
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்குப் பின்னர் நேட்டோ அமைப்பு கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக போலாந்து, ரூமேனியா நாடுகளில் தனது படைகளை அதிகரித்து வருகிறது. இருப்பினும், உக்ரைன் நேட்டோ அமைப்பில் இல்லை என்பதால் உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ அமைப்பால் போராட முடியாது. நேட்டோ சட்டத்தின்படி உறுப்பு நாடுகள் தாக்குதலுக்கு உள்ளானால் அனைத்து நாடுகளும் பதிலடி கொடுக்கும். இது புதினுக்கு சவாலாக இருக்கும் என்றாலும் அதைச் சமாளிக்க முடியும் என்றே அவர் நம்புகிறார்.
பொருளாதார தடைகள்
ரஷ்யாவின் பாதுகாப்பை மேம்படுத்த மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளைச் சந்திக்கத் தயாராக உள்ளதாகவே புதின் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2014இல் கிரிமியாவை இணைத்த போதே உலக நாடுகள் கடும் பொருளாதாரத் தடைகளை விதித்தன. அப்போதே அவர் ரஷ்யாவின் நிதி அமைப்புகளில் வரும் காலத்திற்கு ஏற்ப மாற்றங்களைச் செய்தார். வெளிநாட்டுக் கடனைக் குறைப்பு, அந்நிய செலாவணியை அதிகரிப்பது, விவசாயிகள் உள்ளிட்ட உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அவர் நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே, உலக நாடுகளின் பொருளாதாரத் தடை பெரியளவில் பாதிக்காது என்றே புதின் நம்புகிறார்.
அனைத்திற்கும் தயார்
ஆனால், இதையெல்லாம் வைத்து புதின் உடனடியாக அனைத்து முன்னாள் சோவியத் நாடுகளையும் இணைக்க முற்படுவார் எனக் கூற முடியாது. கொரோனாவால் அனைத்து நாடுகளைப் போலவே ரஷ்யாவும் பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதித்துள்ளது. எனவே, நீண்ட கால போரை ரஷ்யாவால் இப்போது சமாளிக்க முடியாது. அதேபோல அமெரிக்கா நேரடியாக இதில் குதித்தால் நிலைமை தனக்குச் சாதகமாக இருக்காது என்பதும் புதினுக்கு தெரியும். அதேநேரம் ராணுவ நடவடிக்கைகள் சில நிலைமைகளைப் பொருத்து மாறலாம் என்று புதிர் வைத்தே பேசியிருந்தார் புதின்! எனவே, அடுத்து வரும் காலம் உக்ரைனுக்கு மட்டுமல்ல, அனைத்து முன்னாள் சோவியத் நாடுகளுக்கும் முக்கியமானதாகவே இருக்கும்.