ரூ. 9 ஆயிரம் கோடிக்கு குவிந்த முதலீடு.. வெளிநாடு பயணத்தில் சாதித்த முதல்வர் பழனிச்சாமி.. அசத்தல்!
Recommended Video
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாட்டு பயணம் காரணமாக தமிழகத்தில் அதிக அளவில் முதலீடுகள் குவிந்துள்ளது. பல்வேறு துறைகளில் மொத்தம் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மாதம் மூன்று நாடுகளுக்கு வெளிநாடு பயணம் மேற்கொண்டார். சுமார் 14 நாட்கள் இந்த பயணம் செய்தார். லண்டன், அமெரிக்கா,துபாய் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் பழனிச்சாமி பயணம் மேற்கொண்டுள்ளார்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஒரு முதல்வர் இப்படி வெளிநாடு பயணம் மேற்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதுதான் இந்த பயணத்தின் முதல் குறிக்கோளாக இருந்தது. நினைத்தபடியே அதிக அளவில் தற்போது முதலீடுகள் தமிழகத்தில் ஈர்க்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்திற்கு பின் சென்னையில் முதல்வர் பழனிச்சாமி அளித்துள்ள பேட்டியில், தமிழக அரசின் அதிமுக தலைமையிலான ஆட்சியின் கீழ் இதுவரை 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளது. 41 புரிந்துணர்வு ஒப்பந்தம் என்னுடைய வெளிநாட்டு பயணத்தில் போடப்பட்டு இருக்கிறது. இதனால் தமிழகத்தில் பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்பை பெற போகிறார்கள்.
இந்த ஒப்பந்தங்கள் எல்லாம் மிக மிக குறுகிய காலத்தில் செய்யப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது 4 மாதங்களுக்கு ஒருமுறை வெளிநாடு சென்றார். அதன்மூலம் அங்கு முதலீடுகள் அதிகம் செய்யப்பட்டது.
நான் வெளிநாடு சென்ற போது, என்னிடம் தமிழகம் குறித்து வெளிநாட்டு அதிகாரிகள் புகார் வைத்தனர் தமிழக முதல்வர்கள் யாரும் வெளிநாடு வரவேயில்லை, 40 வருடங்களாக தமிழக முதல்வர்கள் வெளிநாடு வரவில்லை என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள், என்று முதல்வர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு வந்த தமிழகத்தின் முதல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறலாம். அவர் மிகவும் எளிமையான மனிதர். எளிமையான தலைவர். தமிழக நலனுக்காக அவர் அயராது பாடுபடுகிறார் . அவரின் உத்வேகத்தை எங்களால் உணர முடிந்தது என்று அவருடன் இருந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அவர் மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். முதலீடு குறித்து அவர் நிறைய விஷயங்களை தெரிந்து வைத்து இருந்தார். முதலீடு தொடர்பான நிறைய கேள்விகளுக்கு அவர் தானாக பதில் அளித்தார். அவர் 7 நாட்கள் என்னுடன் இருந்தார். எப்போதுமே தமிழகம், தமிழக மக்கள் என்றுதான் பேசினார், என்றுள்ளனர்.
முதல்வரின் பயணத்தில் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் ஆர்வம் காட்டினார்கள். நியூயார்க், சான்ஹீசே ஆகிய நகரங்களில் நடந்த 'யாதும் ஊரே' திட்ட நிகழ்ச்சிகளில் தமிழர்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழ் தொழில்முனைவோர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தம் 16 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மதிப்பு 2780 கோடி ரூபாய். இதனால் தமிழகத்தில் நிறைய புதிய தொழிற்சாலைகள் அமையும்.
அதன்படி ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், நாப்தா உற்பத்தியுடன் செயல்படும் திறன் கொண்ட தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க உள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். தமிழகத்தில் செய்யப்பட்ட முதலீடுகளில் இது முக்கியமானது. அதேபோல் பெரியது.
சான்ஹீசே நகரில் நடந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மேலும் 19 ஒப்பந்தங்களை செய்தார். இதனால் இன்னும் கூடுதலாக 7000 பேருக்கு வேலையை கிடைக்கும். இதன் மதிப்பு 2300 கோடி ரூபாய் ஆகும். அதேபோல் டெஸ்லா கார் நிறுவனத்தில் முதல்வர் பார்வையிட்டார்.
தமிழக அரசு தற்போது மின்சார கார்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மின்சார கார்களை உருவாக்கும் டெஸ்லா நிறுவனத்தில் முதல்வர் பார்வையிட்டார். அதேபோல் உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தை பார்வையிட்டார். தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தை தொடங்குவது தொடர்பாக இதில் பேசினார்.
அதேபோல் அமெரிக்காவில் எப்படி கழிவு நீர் சுத்தம் செய்யப்படுகிறது என்று முதல்வர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பார்வையிட்டார். அதை தமிழகத்திலும் செயல்படுத்த தமிழக முதல்வர் திட்டமிட்டுள்ளார். அமெரிக்க பயணம் முடிந்த பின் துபாய் பயணம் தொடங்கியது. துபாய் மாநாடு மிக முக்கியமான முதலீட்டாளர்கள் மாநாடாக பார்க்கப்படுகிறது.
இங்கு முதலில் மொத்தம் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மதிப்பு 3,800 கோடி ரூபாய் ஆகும். இதன்மூலம், 11 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர்.
நியூயார்க்கில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 16 ஒப்பந்தம், சான்ஹீசே நகரில் நடந்த மாநாட்டில் 19 ஒப்பந்தம், துபாயில் 6 ஒப்பந்தங்கள் என்று 41 ஒப்பந்தங்கள் மொத்தமாக கையெழுத்தாகி உள்ளது.
இந்த முதலீடுகள் எல்லாம் தமிழகத்திற்கு 2020க்குள் வரும் என்று முதல்வர் கூறியுள்ளார். இதனால் தமிழகம் மிக வேகமாக தொழிற்வளர்ச்சியை சந்திக்க போகிறது. சென்னை துறைமுகம் இதனால் வேகமாக வளரும். அதேபோல் சென்னை, துாத்துக்குடி, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் இதனால் வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி முதலீடுகளை ஈர்ப்பதற்காக நிறைய அரசு வசதிகளும், மானியங்களும் கூட செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த நிறுவனங்களுக்கு தடையில்லாத மின்சாரம், இலவச தண்ணீர், முறையான பாதுகாப்பு வசதி, நல்ல சாலை வசதி செய்து கொடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் உடனடியாக தொடங்கும் என்று முதல்வர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனால் இனி வேகமாக வேலைவாய்ப்பு பெருகும், தமிழக பொருளாதாரம் மேம்படும். தமிழகத்தில் ஆட்டோமொபைல் துறை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும். எரிசக்தி துறை, ஐடி துறை நாம் நினைக்காத அளவிற்கு வேகமாக வளரும். பெரு நிறுவன தொழில்கள் மட்டுமில்லாமல் சிறு நிறுவனத்தின் தொழில்கள், குறு நிறுவன தொழில்களும் வேகமாக வளரும்.
அதே சமயம் முதல்வரின் இந்த பயணம் இதோடு முடிய போவதில்லை. அவர் இன்னும் சில நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தற்போது தொழில் வளத்தில் மகாராஷ்டிரா முதன்மை மாநிலமாக உள்ளது. முதல்வர் தனது வெளிநாட்டு பயணங்கள் மூலம் இந்த சாதனையை முறியடித்து தமிழகத்தை முதல் இடத்திற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளார்.
RECOMMENDED STORIES