திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடங்கியது! சூரசம்ஹாரம் எப்போது? மிளகு விரதம் எதற்கு தெரியுமா?
சென்னை: இன்று கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. இன்று முதல் நாள் விரதம் தொடங்குவது எப்படி என்பதை பார்க்கலாம். மேலும் குழந்தை பேறுக்காக காத்திருப்போர் மிளகு விரதம் இருக்க வேண்டும் என்பது ஐதீகம். அதை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமானது கந்த சஷ்டி விரதம் ஆகும். மாதந்தோறும் வரும் வளர்பிறை, தேய்பிறை பட்சங்களில் இரு சஷ்டி திதிகள் வந்தாலும் ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியே கந்த சஷ்டி என அழைக்கப்படுகிறது.

இதை மகா சஷ்டி என்றும் அழைக்கிறார்கள். முருகன், சூரனை வதம் செய்து தேவர்களை காத்த திருநாள் என்பதால் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி சப்தமி வரையிலான 7 நாட்கள் சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
சஷ்டி அன்று சூரசம்ஹாரத்தை தரிசித்த பிறகு சப்தமி திதியில் நடக்கும் முருகனின் திருக்கல்யாணத்தையும் தரிசித்த பிறகே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். சிலர் சஷ்டி வரை மட்டும் விரதம் இருப்பது வழக்கம்.
திருச்செந்தூரில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியுள்ளது. வரும் 27ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. கந்த சஷ்டி விரதம் இருப்போர் இன்று முதல் விரதத்தை தொடங்கியுள்ளனர். அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு விரதத்தை தொடங்கிவிட்டனர்.
காப்பு கட்டுவோர் காலை சூரிய உதயத்திற்கு முன்பாக காப்புக் கட்டிக் கொண்டு விரதத்தை தொடங்கிவிட்டனர். இந்த விரதம் 28ஆம் தேதி வரை அனுஷ்டிக்க வேண்டும். இந்த சஷ்டி நாளில் மிளகு விரதம், இளநீர் விரதம் என பல உண்டு. இவை 7 நாட்கள் கடைப்பிடிப்பார்கள்.
விரதத்தின் போது காலையும் மாலையும் வீட்டில் முருகன் முன் அமர்ந்து கந்தசஷ்டி கவசம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, சண்முக கவசம் உள்ளிட்ட பாடல்களை பாடலாம். அதனுடன் கோயிலுக்குச் சென்று வழிபாடும் நடத்தலாம்.
"சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என பலர் கூற கேட்டிருக்கிறோம். அதாவது குழந்தை பேறு இல்லாதவர்கள் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை தங்கும் என்பதுதான் அந்த பழமொழியாகும். எனவே முருகனே தங்களுக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்று எண்ணி சஷ்டியில் பலர் விரதம் இருந்து குழந்தை பேற்றை பெற்றிருக்கிறார்கள்.
சஷ்டியில் மிளகு விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். அதாவது சஷ்டி முதல் நாளில் ஒரே ஒரு மிளகு, தண்ணீர் குடித்து காலை உணவை சாப்பிடாமல் இருக்க வேண்டும்.
2 ஆவது நாளில் 2 மிளகு+ தண்ணீர், 3ஆவது நாளில் 3 மிளகு என ஒவ்வொரு நாளும் மிளகின் எண்ணிக்கையை அதிகரித்து 6ஆவது நாள் 6 மிளகுகளை சாப்பிட்டு முருகனை வேண்டி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
திருச்செந்தூரில் 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் 6 நாட்கள் சஷ்டி விரதமும் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 27ஆம் தேதியும் நடைபெறுகிறது. அடுத்து 5 நாட்களுக்கு ஊஞ்சல் சேவையும் நடைபெறுகிறது. இதற்காக திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் குவிகிறார்கள்.












Click it and Unblock the Notifications