செவ்வாய்க்கிழமை இதை தானமாக கொடுங்கள்..உங்கள் வாழ்க்கையில் அதிசய மாற்றம் நிகழும்
மதுரை: செவ்வாய்க்கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது. செவ்வாய்க்கு மங்களன், பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். செவ்வாய்க்கிழமை ஒரு பொருளை தானமாக கொடுத்தால் செல்வ வளம் பெருகும் கடன் பிரச்சினை தீரும் என்று ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது. அதே போல செவ்வாய்க்கிழமை சில பொருட்களை தானமாக கொடுக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
கடனில்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்றுதான் பலரும் விரும்புகின்றனர். அதே போல பதவியும் பட்டமும் கிடைக்க வேண்டும் சொந்த வீடு கட்டி வாழ்வாங்கு வாழ வேண்டும் என்றும் பலரும் ஆசைப்படுகின்றனர். தமிழ்க்கடவுளான முருகப் பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.
செவ்வாயையும், முருகப்பெருமானையும், பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப்பொருள் வாங்கினால் பன்மடங்கு பெருகுவதோடு, எல்லாச் சிறப்புகளும் நம்மைத் தேடி வரும். கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பித் தரும் போது செவ்வாய்க்கிழமை தந்தால் வெகு சீக்கிரமே கடன் அடையும். மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படாது. வீடு கட்டுவதற்கு செவ்வாயன்று பூமி பூஜை செய்வது நல்லது அதே போல செவ்வாய்க்கிழமை என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்றும் பார்க்கலாம்.
தென்படாத பிறை! தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை நோன்பு பெருநாள் என அறிவிப்பு
செவ்வாய்பகவான்
அந்தகாசுரன் என்ற அரக்கன் சிவனை நோக்கி தவமிருந்தது வரம் பெற்றான். அதாவது எனது ரத்தம் தரையில் விழும் போது அதில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் பிறக்க வேண்டும் என்பதுதான் அந்த வரம், அதை கொடுத்தார் சிவன். அந்த வரம் பெற்ற அரக்கன் சும்மா இருப்பானா எல்லாரையும் கொடுமைப் படுத்தினான். ஒருமுறை சிவனை எதிர்த்து போரிட்டான். பல ஆண்டுகள் நடந்த போரில் சிவனின் உடல் பகுதியில் இருந்து விழுந்த வியர்வை சொட்டுக்கள் மூலம் பூமி பிளந்தது, செவ்வாய் உருவானது என்கிறது புராணம். அந்தகாசுரனின் ரத்தத் துளிகளை உள்வாங்கிக் கொண்டதால் செவ்வாய் சிவப்பாக காணப்படுகிறாராம். செவ்வாய் பகவான் பூமா தேவிக்கும் மகாவிஷ்ணுவிற்கும் மகனாக அவதரித்தவர் என்கிறது புராணம். செவ்வாய்க்கு மங்களகாரகன், குஜன் என்ற பெயரும் உண்டு. கு என்றால் பூமி, ஜன் என்றார் பிறந்தவர்.
செவ்வாய்க்கிழமை சிறப்பு
செவ்வாய்க்கிழமைகளில் மங்களகரமான செயல்களை மட்டுமே செய்ய வேண்டும். இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை புனித நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் செவ்வாய்க்கிழமையானது துர்கை அம்மன் மற்றும் லட்சுமிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது எனவேதான் அன்றைய தினம் முடி, நகம் வெட்டக்கூடாது என்கின்றனர்.
அப்படி முடி, நகம் வெட்டினால் அதிர்ஷ்டம் போய் துரதிர்ஷ்டம் குடியேறும் என்றும் சொல்கின்றனர். அப்படி மீறி முடி வெட்டி ஷேவிங் செய்தால் வாழ்நாளில் எட்டு மாதங்கள் குறையுமாம்.
நோய் பாதிப்பு வரும்
செவ்வாய் பகவன் ரத்தக் காரகன். ரத்தத்தில் இருந்து முடி வளர்கிறது. செவ்வாய்க்கிழமைகளில் முடியை வெட்டினால் ரத்தம் தொடர்பான நோய்கள் ஏற்படுமாம். அதே நேரம் சனியின் தாக்கம் குறைந்து செவ்வாயின் தாக்கம் அதிகரித்து பாதிப்புகள் ஏற்படும் என்கின்றனர் முன்னோர்கள். எனவே இனி செவ்வாய்க்கிழமைகளில் மறந்தும் கூட சில தவறுகளை செய்து விடாதீர்கள்.
செய்யக்கூடாத செயல்கள்
செவ்வாய்க்கிழமை மகாலட்சுமி நம் வீடு தேடி வரும் நாளாக கருதப்படுகிறது. பொதுவாக செவ்வாய்க்கிழமை வீடு துடைக்கவோ, ஒட்டடை அடிக்கவோ கூடாது விளக்கு துடைக்கவோ, விளக்கவோ கூடாது. அப்படி செய்தால் லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாராம். இந்த நாளில் பணத்தை தானாமாகக் கொடுக்க மாட்டார்கள். அன்றைய தினம் உப்பு, தயிர் கூட தானமாக தரக்கூடாது அப்படி கொடுத்தால் மகாலட்சுமி நம்மை விட்டு சென்று விடுவார் என்பது ஐதீகம்.
செல்வ வளம் தரும் துவரம்பருப்பு தானம்
செவ்வாய்க்கிழமை துவரம்பருப்பு தானம் கொடுத்தால் கடன் பிரச்சினை நீங்கி செல்வ செழிப்புடன் வாழ முடியும். குறைந்த பட்சம் 9 வாரங்களுக்காவது துவரம்பருப்பு தானமாக கொடுக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை அன்று தாமிரம், குங்குமம்,செம்பருத்தி, தேன், மிளகாய் ஆகியவற்றை தானம் செய்வது நல்லது. அதோடு சிவப்பு நிற பழங்கள் மற்றும் சிவப்பு நிற ஆடைகளையும் தானமாக வழங்கலாம். இப்படி தானம் செய்வதால் முருகப்பெருமான் மகிழ்ச்சியடைவார்.
செவ்வாய்க்கிழமை மவுன விரதம்
செவ்வாய்க்கிழமையன்று ஒருவர் மவுனவிரதம் அனுஷ்டித்தால் யாகம் செய்த பலனை ஒருவர் அடையலாம் என்கிறது. அதாவது செவ்வாய்க்கிழமையன்று எந்த ஒரு விவாதங்களிலும் ஈடுபடக்கூடாது. அப்படி விவாதம் செய்தால் அது நிச்சயம் தீமையில் சென்று முடியும். எனவேதான் செவ்வாயோ வெறும் வாயோ என்று, அன்றைய தினம் மவுன விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.