திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது..அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கம்
திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்ட உடன் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் திருவண்ணாமலையில் காணும் இடமெங்கும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
நினைத்தாலே முக்கி தரும் திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
திருமாலுக்கும், பிரம்மனுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டியில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக சிவபெருமான் காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே கார்த்திகைதீப திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீப நாட்களில் பல லட்சம் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.
திருவண்ணாமலையில் இன்று மகாதீபம்.. கிரிவலம் வரும் பக்தர்கள்.. குழந்தைகளுக்குப் பாதுகாப்புப் பட்டை
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 9 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பஞ்சரத தேரோட்டம் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. மகாதீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் ஏகன் அநேகன் என்பதை உணர்த்தும் வகையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
பரிவட்ட மரியாதை
திருவண்ணாமலை மகாதீபத்தினை கண்டாலே புண்ணியம் என்பார்கள். தீபம் ஏற்றுபவர்களும் புண்ணியத்திற்கு உரியவர்கள்தான். இந்தத் திருப்பணியைச் செய்யும் உரிமை அனைவருக்கும் கிடையாது. காலம் காலமாக பர்வத மகாராஜாவின் வம்சத்தில் வந்தவர்களே இதைக் காலம் காலமாகச் செய்பவர்கள். அதற்காக ஒவ்வோர் ஆண்டும் மகாதீப தினத்தில் திருவண்ணாமலை ஆலயத்தில் அந்த வம்சத்தினருக்குப் பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.
அர்த்தநாரீஸ்வரர் காட்சி
மாலையில் பஞ்சமூர்த்திகள், சாமி சன்னதி முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அதைத்தொடர்ந்து சரியாக 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி, சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் முன்பு வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது.
2668 உயர மலையில் மகா தீபம்
அதே நேரத்தில் 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோவிலில் கூடி இருக்கும் பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர். கிரிவல பாதையில் 14 கிலோ மீட்டர் தூரத்திலும் இருக்கும் பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்கியபடி முழக்கமிட்டது திருவண்ணாமலை எங்கும் எதிரொலித்தது.
ஒளி வெள்ளத்தில் மிதக்கும் திருவண்ணாமலை
மகாதீபம் ஏற்றப்படும் நாளில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிப்பவர்கள் தீபம் ஏற்றும் வரை தங்கள் வீடுகளிலோ, வியாபார நிறுவனங்களிலோ மின்விளக்கு போடமாட்டார்கள். மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றிய பிறகே விளக்கு போடுவார்கள். மேலும் தங்கள் வீடுகளிலும், வீடுகளின் முன்பும் அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனர். திருவண்ணாமலை நகரம் முழுவதுமே ஒளி வெள்ளத்தில் மிதந்தது. கண்ணைக்கவரும் வான வேடிக்கைகளும் நடைபெற்றன. நகரம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி காட்சிகள் பொறுத்தப்பட்டிருந்தன. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.