திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 16: நல்ல வார்த்தைகளையே பிறரிடம் பேசுங்கள்! உருப்படாதுனு சொல்லாதீர்
திருப்பாவை - பாடல் 16
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.

பாடல் பொருள்: எங்களது தலைவனாகவும் நாயகனாகவும் இருக்கும் நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காப்பானே! ஆயர்குலத்தை சேர்ந்த சிறுமிகளான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக! மாயச் செயல்கள் செய்பவனும் கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு சிறு முரசை தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதை பெற்றச் செல்லவே நாங்கள் நீராடிவட்டு வந்திருக்கிறோம். அவனை துயிலெழுப்பும் பாடலைகளையும் பாடவுள்ளோம். உன் வீட்டு வாசல் கதவை திறந்துவிடு!
விளக்கம்: யாராவது ஒருவர் உங்களிம் வந்து ஒரு செயலை செய்ய போவதாக சொன்னால், அந்த செயல் உங்களுக்கு பிடிக்காமல் போனாலும் கூட ஆரம்பத்திலேயே இதை செய்யாதே , நீ செய்யப் போவது உருப்படாது என்றெல்லாம் அபசகுனமான வார்த்தைகளை பேசிவிடக் கூடாது. அப்படியா என நல்ல வார்த்தைகளை கூற வேண்டும். அறிவுரைகளை கூறலாம். ஆனால் ஆணவமாக பேசுதல் கூடாது.
திருவெம்பாவை பாடல் - 16
முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்
பாடல் பொருள்: மேகமே! முதலில் இந்தக் கடல் நீரை உட்கொண்டு மேலே எழுந்து இந்த உலகை காக்கும் உமையவளின் திருமேனி போல நீலநிறத்தோடு விளங்கி எம்மை அடிமையாக உடையவளது அழகான சிற்றிடை போல மின்னி, எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த பொன்னினால் செய்யப்பட்ட சிலம்பு போல ஒலித்து, அவளது திருப்புருவம் போல் வானவில் விட்டு, நம்மை அடிமையாக உடையாளாகிய அவ்வம்மையினின்றும் பிரிதல் இல்லாத, எங்கள் தலைவனாகிய இறைவனது, அடியார்களுக்கும், பெண்களாகிய நமக்கும், அவள் திருவுளம் கொண்டு முந்திச் சுரக்கின்ற இனிய அருளைப் போன்று இடை விடாது பொழிவாயாக என்று வேண்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications