கனமழை எச்சரிக்கை..சதுரகிரி செல்ல 2 நாட்களுக்கு தடை..வனத்துறை அறிவிப்பால் பக்தர்கள் ஏமாற்றம்
கனமழையால் பிப்ரவரி 3,4ஆம் தேதி சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
விருதுநகர்: தைப்பூசம் திருநாளை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் கனமழை எச்சரிக்கையால் தை மாத பிரதோஷம், பெளர்ணமியை முன்னிட்டு பிப்ரவரி 3,4ஆம் தேதி பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை மலையேறி தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்த பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
சதுரகிரி என்பது கயிலாயத்தை விட புனிதமானது எனப் போற்றுகிறார் நாரதர். ஆடி அமாவாசை, சித்திரை மாத பௌர்ணமி தினம், மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திலும் இந்த சதுரகிரி ஈசனை வணங்குவதற்கு வானில் இருந்து தேவர்கள் வருகிறார்கள் என்கிறார் அகஸ்தியர். இன்றும் சட்ட நாதமுனி, கோரக்க முனிவர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் தபசை கலைத்து, ஒவ்வோர் ஆடி அமாவாசையிலும் இங்குள்ள புனித ஆகாய கங்கை தீர்த்தம், கௌண்டின்ய தீர்த்தம், சந்திர தீர்த்தங்களில் உஷத் காலத்தில் நீராடி சந்தன மகாலிங்கத்தை வணங்கி மகிழ்கின்றனர் என்கிறது அகஸ்தியர் நாடி.
தைப்பூசம்..பிரியாத வரம் தரும் முருகன்..இந்த ஒரு விரதம் தம்பதியர் ஒற்றுமையை அதிகரிக்கும்
காய கல்ப மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர். சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சதுரகிரி சென்று வந்தால் உடல் நோய் மட்டுமல்ல மன அழுத்தம், மன பாரம் கூட நீங்குகிறது என்பது இந்த கோவிலுக்கு சென்று வந்தவர்களின் அனுபவம்.
பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் இங்குள்ள நீர் நிலைகளில் புனித நீராடி இறைவனை வணங்குவது மிகவும் புண்ணியம் என்கிறது நாடி. எட்டு ஆடி அமாவாசை தொடர்ந்து வனதுர்க்கைக்கும் சங்கர நாராயண லிங்கமான இரட்டை லிங்கத்திற்கும், பிலாவடி கருப்பசாமிக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால், செல்வம் கொழிக்கும், தொழில் விருத்தி அடையும். வம்சாவளியாக வரக்கூடிய சர்க்கரை நோய் கண்டிப்பாக குணம் ஆவதுடன், அந்த வம்சத்தினருக்கே இதய நோய், காமாலை போன்ற கொடிய நோய்கள் பாதிக்காது என்கிறார், அகஸ்தியர்.
இன்றைக்கும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி வந்து மலையேறி சுந்தர மகாலிங்கத்தை தரிசனம் செய்து செல்கின்றனர். அமாவாசைக்கு 4 நாட்களும் பவுர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. மழை காலங்களில் நீரோடைகளில் வெள்ளம் ஏற்படும் சமயங்களில் பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி அளிப்பதில்லை.
தைப்பூசம் திருநாளை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தை மாத பிரதோஷம், பெளர்ணமியை முன்னிட்டு பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 6ஆம் தேதி வரைக்கும் பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறிச் செல்ல அனுமதி வழங்கப்படும். மலைக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மாவட்ட நிர்வாகத்தின் நிபந்தனைகளை பக்தர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாளை பிப்ரவரி 3 மற்றும் நாளை மறுநாள் பிப்ரவரி 4ஆம் தேதி பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மலை அடிவாரத்திற்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை மலையேறி தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்த பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.