திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி..10 நாட்கள் சொர்க்கவாசல் திறப்பு..2.50 லட்சம் டிக்கெட்டுகள் நாளை ரிலீஸ்
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பத்து நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ஜனவரி 2ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு 2.50 லட்சம் டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோவிலில் சங்கராந்தி, தீபாவளி ஆஸ்தானம், பிரம்மோற்சவ விழா மற்றும் முக்கிய பண்டிகைகளின் போது கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி வரும் 27ஆம் தேதி கோவிலை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை மூலவர் மீது பட்டு துணியால் மூடப்படும். கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சாமி, வகுலமாதா, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெறும்.
பின்னர் பச்சை கற்பூரம், மஞ்சள், கிச்சலிகட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோவில் முழுவதும் தெளிக்கப்படும். கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி, தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட உள்ளது. அன்று காலை 11 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் 5 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்படுகிறது. திருப்பதியில் நேற்று 63,145 பேர் தரிசனம் செய்தனர். 22,411 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினார். ரூ.4.39 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசனத்திற்காக மட்டும் 5 லட்சம் தரிசன டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 50,000 டோக்கன்கள் என்ற அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதே போல் 2.5 லட்சத்திற்கும் அதிகமான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களும் ஒதுக்கப்பட உள்ளது. சிறப்பு தரிசனத்திற்கு ஒரு நாளைக்கு 25,000 டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. சர்வ தரிசனத்திற்கான டோக்கன்கள் திருப்பதியில் மட்டுமே பெற முடியும். இதனால் கூட்டத்தை முறையாக கட்டுப்படுத்த முடியும் என்பதுடன், தேவையற்ற கூட்ட நெரிசலையும் தவிர்க்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வைகுண்ட ஏகாதசி சமயத்தில் திருப்பதிக்கு பக்தர்கள் வர எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. அதே சமயம் தரிசன டோக்கன்கள் ஒதுக்கப்பட்ட பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடி நீர் ஆகியவை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். வரிசையாக பக்தர்கள் செல்ல போதிய ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் சாதாரண பக்தர்கள் சாமி கும்பிடுவதற்காக வரிசையில் சென்று கொண்டிருக்கும் போது விஐபிகள் யாராவது வந்தால் சாதாரண பக்தர்களை தடுத்து நிறுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சொர்க்க வாசல் திறக்கப்படும் நாள் அன்று காலை சுப்ரபாத சேவை முடிந்த பின்னர் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் நேற்று 20,000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் ஜனவரி 2ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு 2.50 லட்சம் டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.