வைகுண்ட ஏகாதசி..ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு..பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்சி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் ராப்பத்து விழா தொடங்கியுள்ளது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதலாவது திவ்ய தேசமாக பக்தர்களால் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். பூலோக வைகுண்டம் என்றும் இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. பகல்பத்து விழா 23ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அரையர் சேவையும் அற்புதமாக நடைபெற்றது. தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பகல்பத்து விழாவின் கடைசி நாளான நேற்று காலை 6 மணிக்கு மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ரத்தினக்கிளி தலையில் நாகாபரணம்,பவளமாலை,அடுக்கு பதக்கம், ஏலக்காய் ஜடை தரித்து மூலஸ்தானத்திலிருந்து தங்கப் பல்லக்கில் புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது. உற்சவர் நம்பெருமாள் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து நாளை அதிகாலை 3.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.
தொடர்ந்து இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியாக மூன்றாம் பிரகாரத்திற்கு வந்த நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வந்தடைந்தார். அதிகாலை 4.45 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா.. ரங்கா..ரங்கா.. என முழக்கமிட்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.
நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்து மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வந்தடைந்தார். அங்கு நம்பெருமாள் சுமார் 1 மணி நேரம் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இன்று காலை 9 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை பொதுஜன சேவையும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அரையர் சேவையுடன், பொது ஜனசேவையும் நடைபெறும்.
திருமாமணிமண்டபத்தில் இருந்து நம்பெருமாள் நள்ளிரவு 12 மணியளவில் புறப்பட்டு மறுநாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைவார். விழாவையொட்டி ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுப்பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் விழாக்கோலம் பூலோக வைகுண்டமாக ஜொலிக்கிறது. வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி ஸ்ரீரங்கத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், 3,000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று முதல் ராப்பத்து விழா தொடங்கியுள்ளது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ராப்பத்து ஏழாம் திருநாளான, 8ஆம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான, 9ஆம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 11ஆம் தேதி தீர்த்தவாரியும், 12ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவு பெறுகிறது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை முதலே பெருமாள் கோவில்களில் காத்திருந்த பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக இறைவனுடன் சென்று சாமி தரிசனம் செய்தனர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மதுரை தல்லாக்குளம் பெருமாள் கோவில்களில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பத்துநாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர்.