மணமகனுக்கு பின்னால் மணப்பெண் தலை குனிஞ்சிதான் வரணும்.. அநியாயம்! நிஜத்திலும் இவர் குணசேகரன்தானா?
சென்னை: பெண்கள் தலை குனிந்துதான் நடந்து செல்ல வேண்டும் என எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் மாரிமுத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தமிழ் திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் மாரிமுத்து. இவர் இயக்குநரும் ஆவார். தற்போது சின்னத்திரையில் நுழைந்த அவர் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார்.
அந்த சீரியலில் குணசேகரன் எனும் கேரக்டரில் நடித்து வருகிறார். அதாவது 4 அண்ணன் தம்பிகள், அவர்களில் 3 பேர் படிக்காதவர்கள், அவர்களுக்கு கல்லூரியில் கோல்டு மெடல் வாங்கிய பெண்களை அவர்களது பெற்றோர் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
3 பெண்கள்
அந்த 3 பெண்களையும் மனிதராக கூட மதிக்காத இவர்கள் அடிமை போல் நடத்துகிறார்கள். அதாவது பெண் என்றால் சமையல் வேலை, வீட்டு வேலை செய்வது அத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும், ஆண்களுக்கு அறிவுரை கொடுக்கக் கூடாது, கணவர் நடத்தும் நிறுவனங்களில் பணியாற்றக் கூடாது, சுருக்கமாக சொல்வதனால், கணவன்மார்களுக்கு அடங்கி ஒடுங்கி செல்ல வேண்டும்.
இளைய தம்பிக்கு திருமணம்
ஆனால் இளைய தம்பிக்கு திருமணம் செய்து வைக்கப்படும் ஜனனி பெண்ணியம் பேசுகிறார். இதனால் அவர் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறார். இவரது திருமணத்தின் போது உறவினரின் வற்புறுத்தலின் பேரில் ஜனனி டான்ஸ் ஆடுவதை குணசேகரன் கடுமையாக எதிர்ப்பார்.
சீரியலில் தாக்கம்
இந்த சம்பவம் சீரியலில் எடுக்கப்பட்டிருந்தாலும் இதன் தாக்கம் அதிகமாகவே இருந்தது. அண்மையில் நீயா நானா நிகழ்ச்சியில் மணப்பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட விவாதத்திற்கு நடுவராக வந்தார். இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் உங்களுக்கு பிற்போக்கு கருத்துகள் இருப்பதாக சொல்லப்படுகிறதே என கேள்வி எழுப்பப்பட்டது.
தமிழ் பண்பாடு
அதற்கு ஆமாம், மணப்பெண்கள் புடவை கட்டி ஆடிக் கொண்டு வர முடியாது. மணமகனுக்கு கொஞ்சம் பின்னால் நடந்து வருவதுதான் தமிழ் பண்பாடு என அவர் கூறிய நிலையில் அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளன. இந்த பேட்டியின் போது அவர் குணசேகரன் கேரக்டரில் இருந்து வெளியே வரவில்லையா இல்லை அவரது குணமே இப்படித்தானா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.