கேரளாவில் வெடித்த ’மனுஸ்மிருதி’! ஜாதிய அமைப்பை ஆதரித்த ஆதி சங்கராச்சாரியார்- அமைச்சர் சர்ச்சை பேச்சு
திருவனந்தபுரம்: இந்தியாவில் இருக்கும் கொடூரமான ஜாதிய கட்டமைப்புக்கு வக்காலத்து வாங்கி அதன் செய்தித் தொடர்பாளர் போல செயல்பட்டவர் ஆதி சங்கரச்சாரியார் என கேரளா அமைச்சரும் முன்னாள் சபாநாயகருமான எம்பி ராஜேஷ் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. ஆதி சங்கராச்சாரியாரை இழிவுபடுத்தி கேரளா அமைச்சர் ராஜேஷ் பேசிவிட்டதாக இந்துத்துவா அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
கேரளாவின் வர்கலா சிவகிரி மடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ராஜேஷ் பேசியதாவது: கேரளாவில் போற்றுதலுக்குரிய ஆச்சாரியார் ஒருவர் இருந்தார் எனில் அது ஸ்ரீநாராயண குரு மட்டும்தான். ஆதி சங்கரச்சாரியார் அல்ல. கேரளாவில் பிறந்த ஆதி சங்கராச்சாரியார்,
மனுஸ்மிருதி அடிப்படையிலான ஜாதிய கட்டமைப்புக்கு ஆதரவானவர். ஜாதிய கட்டமைப்புக்கு செய்தித் தொடர்பாளர் போல பேசியவர்.

ஆனால் ஸ்ரீநாராயண குரு, ஜாதிய கட்டமைப்புக்கு எதிராக, ஜாதிய கட்டமைப்பை ஒழிக்கப் போராடியவர். ஜாதிய கட்டமைப்பை முழுமையாகவும் உறுதியாகவும் ஆதரித்தவர் ஆதி சங்கராச்சாரியார். சமூகத்தில் நிலவும் ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு காரணமானவர் ஆதி சங்கராச்சாரியார். இவ்வாறு கேரளா அமைச்சர் ராஜேஷ் விமர்சித்திருந்தார்.
கேரளா அமைச்சர் ராஜேஷின் இந்த கருத்துக்கு மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான முரளீதரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் முரளீதரன் கூறுகையில், இந்து மதத்துக்குள் அமைச்சர் ராஜேஷ் பிரிவினையை ஏற்படுத்துகிறார். ஆதி சங்கராச்சாரியார் குறித்து பொய்யான கருத்தை பேசி வருகிறார். ஜாதிய பாகுபாட்டை கூர்மைப்படுத்தி ஓட்டுகளைப் பெற முயற்சிக்கிறார். சங்கராச்சாரியாரை அவமதிப்பதை நாங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது என்றார். இதேபோல் பல்வேறு இந்துத்துவா அமைப்பினரும் அமைச்சர் ராஜேஷ் கருத்தை விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications