ஜிபிஎஸ் டிராக்கிங்.. பிரேக் தி செயின்.. கொரோனாவை எதிர்கொள்ள கேரளா மாஸ் திட்டம்.. சைலஜா அதிரடி!
கேரளாவில் கொரோனா வைரசுக்கு எதிராக பிரேக் தி செயின் என்று பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரசுக்கு எதிராக பிரேக் தி செயின் என்று பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா இதற்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் 34 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்று மட்டும் மொத்தமாக இந்தியாவில் 5 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது.
அதன்படி கேரளாவில் மொத்தம் 22 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது. கேரளாவில் இன்று ஒருவருக்கு புதிதாக இந்த வைரஸ் தாக்கியது. கேரள மாநில அரசு மிகவும் கடினமான நடவடிக்கைகள் மூலம் இந்த வைரஸை கட்டுப்படுத்தி வருகிறது.
கொரோனா பாதிப்பால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும்.. சொல்வது ரிசர்வ் வங்கி கவர்னர்
எத்தனை பேர்
கேரளாவில் கொரோனா தாக்கப்பட்ட 22 பேருடன் தொடர்பு கொண்ட எல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 7677 பேர் இப்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 7377 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருக்கிறார்கள். 302 பேர் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்கிறார்கள். 106 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இதில் 1897 பேரின் ரத்த மாதிரி இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளது.
ஜிபிஎஸ் எப்படி
இதில் வீட்டில் இருக்கும் 7377 பேரும் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களின் போன் மூலம், இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனாலும் சிலர் வீட்டை விட்டு ரகசியமாக வெளியே சென்று வருகிறார்கள். இவர்களை தடுப்பதற்காக தற்போது நேரடியாக வீட்டிற்கே சோதனை செய்ய நபர்களை அனுப்ப கேரள அரசு முடிவு செய்துள்ளது. இவர்கள் வீட்டில் உள்ளதை உறுதி செய்ய அதிகாரிகள் அனுப்பப்படுகிறார்கள்.
சாலை ரயில்
இந்த வைரசுக்கு எதிராக விமான நிலையங்களில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதே சமயம் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கேரளா அரசு மிக கடுமையான பாதுகாப்பை மேற்கொள்கிறது. இதை எல்லாம் கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா நேரடியாக கண்காணிக்கிறார். கேரளா வரும் எல்லாம் ரயிலிலும் இருக்கும் எல்லா சுகாதார பெட்டிகளும், சுகாதாரத்துறை மூலம் சோதனை செய்யப்படுகிறது.
சிறுவர்கள்
அதே சமயம் இன்னொரு பக்கம் கேரளாவில் பள்ளிகள், கல்லூரிகள், கடைகள் மூடப்பட்டுள்ளது. பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை எல்லோரும் பாஸ் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்வுகள் கிடையாது. மாணவர்களுக்கு இந்த மாதத்திற்கான மதிய உணவு திட்டம், வீட்டிற்கே சென்று வழங்கப்படும். கேரள அரசு அனைத்து பிரச்சனைக்கு இடையில் இதையும் கூட நினைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு பயணிகள்
கேரளாவிற்கு கடந்த ஒரு வாரத்தில் 5150 பயணிகள் வந்துள்ளனர். இதில் 120 பேர் வரை தீவிரமாக சோதனை செய்யப்பட்டு தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தனியார் ஹோட்டலில் இவர்கள் தங்கவைக்கப்பட்டு, கண்காணிப்பு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை எங்கும் வெளியே செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
பிரேக் தி செயின்
இதற்காக கேரளாவில் பிரேக் தி செயின் என்ற முழக்கம் உருவாக்கப்பட்டு, பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. மக்களுக்கு இதன் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மக்கள் இதற்கு முன் கொரோனா வந்த நபர்கள் யாருடனும் தொடர்பு கொண்டு இருந்தால் அதை தெரிவிக்கும்படியும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடிகர்கள் உட்பட பலரை வைத்து இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
செய்தியாளர்கள் எப்படி
அமைச்சர் சைலாஜா அனைத்து பணிகளையும் நேரடியாக கண்காணித்து வருகிறார். அதேபோல் செய்தியாளர்கள் கொரோனா குறித்து செய்தி சேகரிக்கும் போது மிகவும் கவனமாக செய்தி சேகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய் வந்தவர்களை, சந்தேகம் உள்ளவர்களை தொட்டு பேச கூடாது. அது தவறு. அவர்களின் குடும்பத்தினரை பேட்டி எடுக்கும் போது கவனமாக எடுக்க வேண்டும். மைக்குகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.