வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கிய மாவட்ட ஆட்சியர்.. துரிதமாக செயல்பட்டு மீட்ட மீட்பு படையினர்
திருவனந்தபுரம்: வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சென்ற வயநாடு மாவட்ட ஆட்சியர் நிலச்சரிவில் சிக்கியுள்ளார். பின்னர் மீட்பு படையினரின் துரித நடவடிக்கை காரணமாக அவர் உடனடியாக மீட்கப்பட்டிருக்கிறார்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 30ம் தேதி அதிகாலையில் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு மணி நேரத்தில், அதாவது அதிகாலை 4.30 மணியளவில் மேப்பாடிக்கு அருகில் உள்ள பகுதிகளில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால், என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்கு கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. மேற்குறிப்பிட்ட பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் மண்ணால் மூடப்பட்டிருக்கின்றன. விவரமறிந்த மீட்டு படையினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்
தற்போதுவரை 250 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். உயிரிழப்பை பொறுத்தவரை நேற்று 100-150 என்கிற அளவில்தான் இருந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி சுமார் 270 சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தோண்ட தோண்ட சடலங்கள் வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
கனமழை தொடர்ந்து வருவதால் சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், 3 கிராமங்களை சேர்ந்த 1000 பேர் மண்ணுக்கடியில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதேபோல 100க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை.
இந்நிலையில் விளாங்காடு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் முகாமுக்கு வயநாடு மாவட்ட ஆட்சியர் சினேகில் குமார் சிங் நேற்று சென்றிருந்தார். முகாமை பார்வையிட்ட அவர், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைப்பதை உறுதி செய்தார். அங்கிருந்து அவர் வெளியேற முயன்றபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் அவரும், உடன் வந்த அதிகாரிகளும் சிக்கிக்கொண்டனர்.
துரிதமாக செயல்பட்ட பேரிடர் மீட்பு படையினர் ஆட்சியர் உட்பட அனைவரையும் கயிறு கட்டி மீட்டனர். இதனையடுத்து ஆட்சியர் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கடந்த இரண்டு நாட்களில் 11வது முறையாக இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த பகுதியை ஒட்டியுள்ள ஆதிச்சிப்பாரா மலை பகுதியில் நேற்று மாலை கனமழை பெய்திருக்கிறது. இதுதான் திடீர் நிலச்சரிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற மாவட்ட ஆட்சியரே நிலச்சரிவில் சிக்கியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications