"தண்ணீர் கொடுங்க சார்".. கேரளாவில் மலைமுகட்டில் சிக்கிய இளைஞர்.. எப்படி நடந்தது? பரபர பின்னணி!
திருவனந்தபுரம்: கேரளாவில் பாலக்காட்டில் இருக்கும் மலை பகுதியில் பாபு என்ற இளைஞர் சிக்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.
Recommended Video
கேரளா மாநிலம் மலப்புழா பகுதியில் உள்ள சேராட் கிராமத்தை சேர்ந்தவர் ஆர் பாபு. இவர் அங்கு உள்ள குறம்பாச்சி மலைப்பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன் டிரெக்கிங் செல்லும் போது மலைமுகட்டில் சிக்கினார்.
அங்கு நண்பர்களுடன் இணைந்து இவர் டிரெக்கிங் சென்றுள்ளார். மலையின் உச்சிக்கு சென்றுவிட்டு பின்னர் மலையில் இருந்து இறங்கும் போது அவர் மலைமுகடு ஒன்றில் சிக்கி உள்ளார்.
43 மணி நேரம்! 2 ஹெலிகாப்டர் வந்தும் பயனில்லை! கேரளாவில் மலைமுகட்டில் சிக்கி உள்ள இளைஞர் -பரபர வீடியோ
எப்படி விழுந்தார்?
மலையில் இருந்து இவர் நண்பர்களுடன் இறங்கி வந்து இருக்கிறார். அப்போது திடீரென பாபுவின் கால்கள் வழுக்கி உள்ளது. இதையடுத்து சரசரவென சரிந்த அவர் வேகமாக மலையில் இருந்து கீழே விழும்படி சென்றுள்ளார். சரிந்தபடி சென்ற அவர் அப்போது அங்கு இருந்த மலைமுகடு ஒன்றில் குதித்து உள்ளார். அப்போது மலைமுகட்டில் சிக்கிய அவர் கடந்த 43 மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே சிக்கி தவித்து வருகிறார்.
எங்கே இருந்தார் என்றே தெரியவில்லை
அந்த மலைமுகடு உள்ளடங்க இருப்பதால் அவர் எங்கே சிக்கி இருக்கிறார் என்பதே தெரியவில்லை. முதலில் பாபுவுடன் சென்ற நண்பர்கள், பாபு மலையில் இருந்து கீழே விழுந்துவிட்டார் என்றுதான் நினைத்து உள்ளனர். ஆனால் முகட்டில் சிக்கிய பாபு அங்கிருந்து கத்தி இருக்கிறார். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று பாபு கத்தி இருக்கிறார். இதையடுத்து பாபு உயிரோடு இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்ட அவரின் நண்பர்கள் வேகமாக கீழே சென்று ஊர் மக்களை அழைத்துள்ளனர்.
மீட்க முடியவில்லை
முதலில் ஊர் மக்கள் அவரை காப்பாற்ற முயன்று முடியவில்லை. அதன்பின் பின் வரும் பணிகள் அவரை மீட்பு பணியில் மேற்கொள்ளப்பட்டது.
ஊர் மக்கள் கயிறு கட்டி தூக்க முயற்சி - தோல்வி
தீயணைப்பு படையினர் கீழே இறங்கி தூக்க முயற்சி - தோல்வி
அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாததால் டிரோன் மூலம் முதலில் அவரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
கடலோர காவல்படை ஹெலிகாப்டர் வந்து தூக்க முயற்சி - தோல்வி
கடற்படை ஹெலிகாப்டர் வந்து தூக்க முயற்சி - தோல்வி
ஏன் தோல்வி
அந்த மலை முகடு மிகவும் குறுகலான இடத்தில் இருப்பதால் ஹெலிகாப்டர் நெருக்கமாக செல்ல முடியவில்லை. இந்த நிலையில் 43 மணி நேரமாக அவருக்கு உணவு வழங்க முடியவில்லை. அவர் சார் தண்ணீர் கொடுங்க சார்.. எனக்கு பசிக்குது சார் என்று கத்திக்கொண்டே இருந்துள்ளார். இந்த வீடியோவும் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை ராணுவத்தினர் மீட்பு பணியில் குதித்தனர்.
உடல்நிலை ஓகே
அந்த மலைமுகத்திற்கு அருகே இருக்கும் பகுதிக்கு ராணுவத்தினர் சென்றனர். அங்கிருந்து கயிறு மூலம் அந்த இளைஞருக்கு உணவு வழங்கப்பட்டது. அதேபோல் தண்ணீரும் அந்த இளைஞருக்கு வழங்கப்பட்டது. அவர் அருகில் சென்ற ராணுவத்தினர், நீங்கள் இனி தண்ணீர் கேட்டு கத்த வேண்டாம் . அது உங்கள் எனர்ஜியை மேலும் போக்கும். நீங்கள் கவனமாக இருங்கள். உங்களை காப்பாற்றி விடுவோம் என்று கூறி உள்ளனர்.
முடிவை நெருங்குகிறது
பாபு ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவருக்கு காலில் மட்டும் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர். மலைகளில் ஏறும் பயிற்சி எடுத்த சிறப்பு ராணுவ படை வீரர்கள் இந்த மீட்பு பணியில் குதித்து உள்ளனர். ராணுவ வீரர்கள் பாபுவிற்கு அருகே சென்றுவிட்டனர். இதனால் இன்னும் சற்று நேரத்தில் அவர் மீட்கப்பட்டு விடுவார் என்று கூறப்படுகிறது.