கவன்வர் யாத்திரை தவறு என்றால்.. பக்ரீத் கொண்டாட்டங்களும் தவறு தான்.. காங்கிரஸ் மூத்த தலைவர் தாக்கு
திருவனந்தபுரம்: கொரோனா காலத்தில் கன்வர் யாத்திரை தவறு என்றால் பக்ரீத் கொண்டாட்டங்களும் தவறு தான் எனக் கூறியுள்ள காங்கிரஸ் தேசிய செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, கேரள அரசு பக்தீத்தை முன்னிட்டு தளர்வுகளை அறிவித்துள்ளதை விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்து கொரோனா இப்போது தான் கட்டுக்குள் வந்துள்ளது. இன்று நாட்டில் 41 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் கொரோனா 2ஆம் அலை இன்னும் முழுமையாக முடியவில்லை என்பதால் மாநில அரசுகள் தளர்வுகளை அறிவிக்கும்போது உச்சபட்ச கவனத்துடன் செயல்பட வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

காங்கிரஸ் விமர்சனம்
இந்நிலையில் கேரள அரசு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதை அம்மாநில காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தேசிய செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தனது ட்விட்டரில், "கேரளாவில் பக்ரீத் கொண்டாட்டங்களுக்கு 3 நாட்கள் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சரியான நடவடிக்கை இல்லை. குறிப்பாக தற்போது அங்கு கொரோனா பரவலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.. கொரோனா காலத்தில் கன்வர் யாத்திரை தவறு என்றால், பக்ரீத் கொண்டாட்டங்களும் தவறு தான்" என அவர் விமர்சித்துள்ளார்.

கன்வர் யாத்திரை
கொரோனா பரவல் காரணமாக வட மாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கன்வர் யாத்திரையை உத்தரகண்ட் அரசு ரத்து செய்வதாக அறிவித்தது. அதேநேரம் உத்தரப் பிரதேச அரசு கன்வர் யாத்திரைக்கு அனுமதி அளிக்கவுள்ளதாகத் தெரிவித்திருந்தது. கொரோனா அச்சம் இன்னும் விலகாத சமயத்தில் கன்வர் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்பட்டதைப் பலரும் விமர்சித்திருந்தனர்.

உபி அரசு
மேலும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கையும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள், "கொரோனா காலத்தில் ஏன் இப்படியொரு முடிவு? இந்திய மக்கள் முற்றிலும் குழப்பத்தில் உள்ளனர். மக்களை மேற்கொண்டு குழப்ப வேண்டாம்" எனக் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதையடுத்து கனவர் யாத்திரையை ரத்து செய்வதாக உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

கேரளா
அதேநேரம் தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் வைரஸ் பாதிப்பு மெல்ல மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு நேற்று மட்டும் 16150 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், பக்ரீத் காரணமாக கொரோனா ஊரடங்கில் கேரள அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. துணிக்கடைகள், எலக்டிரிக் கடைகள், நகைக்கடைகள் செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தாக்கு
அதேபோல குறைந்தது ஒரு டோஸ் வேக்சின் எடுத்துக் கொண்டவர்கள், 40 பேர் வரை வழிபாட்டுத் தளங்களில் பிரார்த்தனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் இந்த உத்தரவை அம்மாநில எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஏன் இதுபோன்ற தளர்வுகள் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications