"மாதவிடாய் விடுமுறை".. கேரளாவிலேயே முதன்முறையாக.. மாஸ் அறிவிப்பை வெளியிட்ட பல்கலைக்கழகம்!
திருவனந்தபுரம்: கேரளாவிலேயே முதன்முறையாக ஒரு பல்கலைக்கழகம், மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை எடுப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது இந்திய அளவில் பெரும் வரவேற்பையும் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.
கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்தான், மாணவிகளின் நலனைக் கருததில்கொண்டு இந்த அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொச்சி பல்கலைக்கழகத்தில் செயல்படும் மாணவர் சங்கத்தின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகே, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஷாக்! பிரியாணி சாப்பிட்டு பலியானதாக கூறப்பட்ட மாணவி.. ஆனால் போஸ்ட்மார்ட்டமில் ட்விஸ்ட்.. என்ன இது?
மாதந்தோறும் சவால்
பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சந்திக்கும் பிரச்சினைகளில் மிக முக்கியமானது மாதவிடாய் வலி. இந்த சமயத்தில் பெண்களுக்கு வலி ஒரு பக்கமும், எரிச்சல் மறு பக்கமும் சேர்ந்து பாடாய் படுத்திவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக, கறை பட்டு விடுமோ என்ற பயமும் பெண்களுக்கு இந்தக் காலக்கட்டத்தில் ஏற்படுவது.
கட்டாயம்
இந்த மாதவிடாய் காலத்தில் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பிரச்சினை இல்லை. அவர்களுக்கு வேண்டுமென்றால் சிறிது நேரம் படுத்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். ஆனால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் பெண்களின் நிலைமைதான் பரிதாபம். என்ன வலி இருந்தாலும், வெளியே சொல்ல முடியாமல் அவர்கள் வேலையை பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
விடுமுறை கோரிக்கை
எனவே, இந்த மாதவிடாய் காலத்தில் அலுவலகத்திற்கு செல்லும் பெண்களாக இருந்தால், அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பும், பள்ளி - கல்லூரி மாணவிகளுக்கு வருகை பதிவேட்டுடன் கூடிய விடுமுறையும் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 10 ஆண்டுகளாக வலுபெறத் தொடங்கியுள்ளது. இருந்தபோதிலும், இந்தியாவில் மிகச் சில அலுவலகங்கள் மட்டுமே இந்த நடைமுறையை கொண்டு வந்துள்ளது. அதேபோல், ஒன்றிரண்டு கல்வி நிலையங்கள் மட்டுமே இந்த மாதவிடாய் கால விடுமுறைக்கு அனுமதி அளித்திருக்கிறது.
கேரளாவில் முதன்முறையாக..
அந்த வகையில், கேரளாவிலேயே முதன்முறையாக கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தங்கள் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறையை அறிவித்திருக்கிறது. அதாவது, வருகைப் பதிவில் (Attendance) 2 சதவீதத்தை மாதவிடாய் விடுமுறைக்காக மாணவிகள் எடுத்துக் கொள்ளலாம். கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் 75 சதவீதம் வருகை இல்லையென்றால், செமஸ்டர் தேர்வை மாணவர்கள் எழுத முடியாது.
மருத்துவ சான்றிதழ்
எத்தனை நாட்கள் குறைந்திருக்கிறதோ அதற்காக மருத்துவ சான்றிதழை துணைவேந்தரிடம் அவர்கள் சமர்ப்பித்து அதற்கு ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே அவர்களால் தேர்வு எழுத முடியும். ஆனால், இனி இந்த பல்கலைக்கழக மாணவிகளுக்கு 73 சதவீதம் வருகை இருந்தால் மீதமுள்ள 2 சதவீதத்திற்காக அவர்கள் மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. விடுமுறைக் கடிதம் மட்டுமே சமர்ப்பித்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சங்கத்திற்கான வெற்றி
இந்நிலையில், இந்த மாதவிடாய் விடுமுறை அறிவிப்புக்காக கொச்சி அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு பாராட்டுகள் கிடைத்த போதிலும், இதனை அமல்படுத்துவற்கு அந்தப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் எஸ்எப்ஐ மாணவர் அமைப்பே காரணம் எனக் கூறப்படுகிறது. அந்த அமைப்பு நடத்திய பல்வேறு கட்ட போராட்டங்கள், பேச்சுவார்த்தைகளுக்கு பிறகே இந்த அறிவிப்பை கொச்சி பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது. இதனிடையே, கொச்சி பல்கலைக்கழகத்தை முன்னுதாரணமாக வைத்து பிற கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் மாதவிடாய் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.