காரில் சாய்ந்ததால் எட்டி உதைக்கப்பட்ட சிறுவன்.. ஃபாரின் காரில் அழைத்துச் சென்ற தொழிலதிபர்.. "மாஸ்"
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரு காரில் சாய்ந்ததால் எட்டி உதைக்கப்பட்ட சிறுவனை தொழிலதிபர் ஒருவர் தனது விலை உயர்ந்த வெளிநாட்டு காரில் அழைத்துச் சென்று ஊரை சுற்றிக்காட்டிய சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
காரில் அழைத்துச் சென்றதுடன் மட்டுமல்லாமல் அந்த சிறுவனுக்கு புதிய சட்டை துணிகளும், கையில் பணத்தையும் அந்த இரக்க மனதை உடைய தொழிலதிபர் கொடுத்திருக்கிறார்.
பணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒருவரின் தகுதி உயர்ந்துவிடாது.. நல்ல பண்புகளை வைத்துதான் ஒருவரின் தகுதி நிர்ணயம் செய்யப்படும் என்பதற்கு இந்த சம்பவமே சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.
எட்டி உதைக்கப்பட்ட சிறுவன்
கேரள மாநிலம் கண்ணூரில் கடந்த மாதம் 3-ம் தேதி இளைஞர் ஒருவர் நேற்று காரில் வந்துள்ளார். அப்போது சிறிது நேரம் சாலையோரத்தில் அவர் தனது காரை நிறுத்தினார். அந்த சமயத்தில், 6 வயதே ஆன ஏவை சிறுவன் ஒருவன், கார் உரிமையாளர் உள்ளே இருப்பது தெரியாமல் அந்தக் காரின் மீது லேசாக சாய்ந்துள்ளான். இதை பார்த்த கார் உரிமையாளரான இளைஞர், பின்பக்கமாக வந்து அந்த சிறுவனின் இடுப்பில் ஓங்கி உதைத்தார். இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத அந்த பிஞ்சு சிறுவன், அதிர்ச்சியில் உதை வாங்கிய இடத்தை தடவிக்கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டான்.
சிசிடிவி வீடியோவால் கொந்தளிப்பு
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் அடுத்த நாள் முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல்துறைக்கு புகார்கள் குவியவே, போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுவனை எட்டி உதைத்த ஷிஷாத் (26) என்ற இளைஞரை கைது செய்தனர். அவர் மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வருத்தமடைந்த நகைக்கடை அதிபர்
இந்நிலையில், இந்த வீடியோவை பார்த்து கோட்டயத்தைச் சேர்ந்த தங்க நகைக் கடை அதிபரான டோனி வரிக்ச்சன் மிகவும் வருத்தம் அடைந்துள்ளார். ஏழை என்ற ஒரே காரணத்துக்காக அந்த சிறுவனுக்கு இத்தகைய கொடுமை நேர்ந்ததை எண்ணி அவர் மிகவும் வருத்தம் அடைந்தார். இதையடுத்து, அந்த சிறுவன் குறித்து விசாரித்ததில் அவனது பெயர் கணேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கோட்டயத்தில் இருந்து கண்ணூர் வந்த அவர், சிறுவன் கணேஷயைும், அவனது குடும்பத்தினரையும் நேற்று முன்தினம் சந்தித்தார்.
"மனது பாதித்துவிடக்கூடாது"
பின்னர், அந்த சிறுவனையும் குடும்பத்தினரயும் தனது விலை உயர்ந்த வெளிநாட்டு காரில் ஏற்றிய அந்த தொழிலதிபர், அவர்களை கோழிக்கோடு வரை அழைத்துச் சென்றார். தொடர்ந்து, அவர்களை பெரிய ஹோட்டலுக்கு கூட்டிச் சென்று அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டார். இதையடுத்து, சிறுவன் கணேஷ், அவனது தாய் தந்தைக்கு நல்ல துணிமணிகளை வாங்கி தந்த டோனி, பின்னர் மீண்டும் அவர்களை மீண்டும் கண்ணூரில் விட்டுச் சென்றார். இதுகுறித்து டோனி கூறும்போது, "ஏழை என்ற காரணத்தால்தானே தனக்கு இந்த கதி நேர்ந்தது என அந்த சிறுவன் நினைத்துவிடக் கூடாது என எனக்கு தோன்றியது. ஒருவர் செய்த தவறுக்காக சமூகத்தின் மீது அந்த சிறுவனுககு வெறுப்பு வரக்கூடாது. எனவேதான் அவனையும், அவனது குடும்பத்தினரையும் எனது காரில் அழைத்துச் சென்றேன். இன்னும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன்" என்றார்.